பொலிவிய ஆயர்கள் : தேசியக் கணக்கெடுப்பில் அனைவரும் பங்கு கொள்ள அழைப்பு
நவ.20,2012. பொலிவியாவில் இப்புதனன்று எடுக்கப்படும் தேசியக் கணக்கெடுப்பில் பங்கெடுப்பது
குடிமக்களின் கடமை என்பதால் இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அந்நாட்டுக் கத்தோலிக்கத்
திருஅவை கேட்டுள்ளது. இந்த முக்கியமான நிகழ்வில் அனைவரும் பங்கு கொண்டு தங்களைப் பற்றிய
உண்மையான விபரங்களை அளிக்குமாறும் கேட்டுள்ள அந்நாட்டு ஆயர்களின் அறிக்கை, இக்கணக்கெடுப்பு
சமுதாய முன்னேற்றத்துக்கு முக்கியமான கருவி என்றும் கூறியுள்ளது. 11 ஆண்டுகளுக்குப்
பின்னர் எடுக்கப்படும் இக்கணக்கெடுப்பு, அந்நாட்டின் மாநிலங்கள், நகரங்கள், கிராமங்கள்
போன்றவற்றின் உண்மையான நிலவரங்களைப் புரிந்து கொள்வதற்கு உதவும் என்று கூறும் அவ்வறிக்கை,
இதனை ஒளிவுமறைவின்றி எடுக்குமாறு அரசுத் தலைவர்களைக் கேட்டுள்ளது.