2012-11-12 17:26:13

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் சூரிய ஒளி அடுப்பு கண்டறிந்து சாதனை


நவ.12,2012. தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் மின்வெட்டை சமாளிக்க, தேவகோட்டை மாணவர்கள், "சூரிய ஒளி அடுப்பை' கண்டுபிடித்து சாதனை படைத்து உள்ளனர்.
ஒவ்வொரு நாளும் 16 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படும் சூழலில், இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண, தேவகோட்டை லோட்டஸ் பள்ளி மாணவர்கள், "சூரிய ஒளி சமைப்பான்' என்ற பெயரில், சூரிய ஒளி அடுப்பை கண்டறிந்து உள்ளனர்.
மரப் பெட்டிக்குள் கறுப்பு வண்ணமிட்ட துத்தநாகத் தகட்டை வைத்துள்ளனர். அதில், ஒளி ஊடுருவும் வகையில் கண்ணாடித் தட்டும், ஒளியை பிரதிபலிக்கும் வகையில், முகம் பார்க்கும் கண்ணாடியை மேலேயும் இணைத்துள்ளனர்.
முதற்கட்டமாக, மாணவர்கள் இச்சூரிய ஒளி அடுப்பில் காய்கறி, பருப்பை வேகவைத்து காண்பித்தனர். இம்மாதம் 18ம் தேதி, மானாமதுரையில், தேசிய இளம் அறிவியலாளர்கள் மாநாடு நடைபெறும்போது, மாணவர்களின் கண்டுபிடிப்பு மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என கூறப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.