அரசு உதவியின்றி 100 கி.மீ.சாலை: சாதித்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி
நவ.08,2012. அரசு துறையில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து, தங்களது துணிச்சலான நடவடிக்கைகள்
மூலம்,ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மக்களின் கவனத்தை கவர்கின்றனர். இந்த வகையில், கிரானைட் சுரங்கங்கள்
கொள்ளை போவதை, வெளிச்சத்துக்கு கொண்டு வந்த மதுரை கலெக்டர் சகாயம்; காங்கிரஸ் கட்சி தலைவர்,
சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா நடத்திய சட்ட விரோத நில பரிமாற்றத்தை தடுத்து நிறுத்திய
அசோக் கெம்கா என, சாதிக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பட்டியல் நீளுகிறது. இந்த வரிசையில்,
அரசின் நிதி உதவியை எதிர்பார்க்காமல், மக்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காணும்
வகையில், 100 கி.மீ., தூரத்துக்கு, சாலை அமைக்க ஏற்பாடு செய்து, பிரமிக்க வைத்துள்ளார்
ஆம்ஸ்ட்ராங் பமே (Amstrong Pame). இவர், இந்தியாவின் வடகிழக்கு எல்லையில், மணிப்பூர்,
அசாம், நாகலாந்து ஆகிய மாநிலங்களை ஒன்றிணைக்கும் வகையில், நூறுக்கும் மேற்பட்ட கிராம
மக்களின், பல நாள் கனவை நனவாக்கியுள்ளார். மணிப்பூர் மாநிலம், டமீங்லாங் மாவட்டத்தில்,நூறுக்கும்
மேற்பட்ட கிராமங்களில் சாலை வசதி இல்லை . இங்கு சாலைகள் அமைக்க,1982ம் ஆண்டு, மத்திய
அரசு 101 கோடி ரூபாய் திட்டத்திற்கு அனுமதியளித்தது. ஆனால், சாலைகள் போடப்படவில்லை. கடந்த
ஜூன், ஜூலை மாதங்களில் டைபாய்டு, மலேரியா காய்ச்சலால், டமீங்லாங் மாவட்டத்தில் உள்ள கிராம
மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. மலைப்பாங்கான
பகுதி என்பதால், பக்கத்து ஊரில் இருந்து டாக்டர்கள் கிராமங்களுக்கு வர மறுத்தனர். டமீங்லாங்
மாவட்ட துணை கலெக்டராக இருந்த ஆம்ஸ்ட்ராங், தன் மருத்துவ நண்பர்களின் உதவியை நாடினார்.
அவர்கள் உதவியால், 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். பலரும் உயிர் பிழைத்தனர். சாலைகள்
அமைத்தால்தான் மக்களின் நலவாழ்வுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என உணர்ந்த ஆம்ஸ்ட்ராங்,
கிராம மக்களின் துணையுடன் செயலில் இறங்கினார். வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் நிதியுதவியுடனும்,
உள்ளூர் மக்களின் உதவியுடனும், 100 கி.மீ., தூரத்திறகு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
வரும் கிறிஸ்மசுக்குள் பணிகள் முடிந்துவிடும் என, ஆம்ஸ்ட்ராங் பமே நம்பிக்கையுடன் தெரிவித்தார். ஆம்ஸ்ட்ராங்
பமே, 2005ம் ஆண்டுதான், டில்லி, செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
ஜெமி பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற பெருமையுடன், தன் சொந்த மாவட்டமான
டமீங்லாங்கிற்கு துணை கலெக்டராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.