அமெரிக்க அரசுத்தலைவர் பாரக் ஒபாமாவுக்குத் திருத்தந்தையின் வாழ்த்துக்கள்
நவ.08,2012. அமெரிக்க அரசுத்தலைவராக இரண்டாம்முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாரக்
ஒபாமாவுக்குத் தன் வாழ்த்துக்களையும் செபங்களையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட். இச்செவ்வாயன்று அமெரிக்க ஐக்கிய நாட்டில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில்
பாரக் ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி, பல்வேறு உலகத் தலைவர்கள் அவருக்கு
வாழ்த்துக்கள் அனுப்பியுள்ளனர். பாரக் ஒபாமா, அமெரிக்க நாட்டின் அரசுத்தலைவராக இருப்பது
மட்டுமல்லாமல், அகில உலகின் விவகாரங்களில் ஈடுபடும் ஒரு தலைவராகவும் இருப்பதை தன் செய்தியில்
சுட்டிக் காட்டியுள்ளத் திருத்தந்தை, ஒபாமா தன் கடமைகளை உணர்ந்து செயல்படுவார் என்ற தன்
நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார். ஒபாமாவின் தேர்தலைக் குறித்து, செய்தியாளர்களிடம்
பேசிய திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi, உலகில் நீதியையும், விடுதலையையும்
இன்னும் உறுதி செய்வதில் அமெரிக்க அரசுத்தலைவர் முக்கிய பங்கு வகிக்கவேண்டும் என்ற தன்
எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.