நவம்பர் 6 - போரினாலும், வன்முறை மோதல்களாலும் இயற்கை வளங்கள் சீரழிவதை
எதிர்க்கும் உலக நாள்
நவ.07,2012. தொடர்ந்து வளர்க்கக்கூடிய முன்னேற்றங்களை போரும், ஏனைய வன்முறை மோதல்களும்
குலைக்கின்றன என்று ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார். போரினாலும், வன்முறை
மோதல்களாலும் இயற்கை வளங்கள் சீரழிவதை எதிர்க்கும் உலக நாள், நவம்பர் 6, இச்செவ்வாயன்று
கொண்டாடப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன் இவ்வாறு கூறினார். மனிதர்கள்
அனைவருக்கும் பொதுவாக இருக்கும் இயற்கை வளங்களைப் பகிர்ந்து கொள்ள தடைகள் எழும்போது,
வன்முறைகளும், போர்களும் உருவாகின்றன என்பதை ஐ.நா.பொதுச்செயலர் தெளிவுபடுத்தினார். 1990ம்
ஆண்டு முதல் குறைந்தது 18 முறை, இயற்கை வளங்களின் பகிர்வை மையப்படுத்தி மோதல்கள் எழுந்துள்ளன
என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பான் கி மூன், வன்முறைகள் களையப்படுவதற்கு நீதியான
பகிர்தல் அவசியம் என்பதை எடுத்துக் கூறினார். இயற்கை வழங்கும் மரம், வைரம், எண்ணெய்
போன்ற விலையுயர்ந்த வளங்களாக இருந்தாலும், வளமிக்க நிலம், நீர் போன்று தொடர்ந்து நலிந்து
வரும் வளங்களாக இருந்தாலும் இவற்றின் பகிர்வில் எழும் பிரச்சனைகளே கடந்த 60 ஆண்டுகள்
போர்களைத் தூண்டியுள்ளன என்று ஐ.நா.அறிக்கை ஒன்று கூறுகிறது.