இறைவனின் புகழைப் பரப்பும் ஒரு கருவியாக என்னைப் படைத்துள்ளார் - கண்பார்வையற்ற இளம்பெண்
Beno
நவ.02,2012. கண்பார்வையற்ற ஒரு பெண்ணாக இறைவன் என்னைப் படைத்ததற்காக நான் அவரைக் குற்றம்
சாட்டவில்லை, மாறாக, இறைவனைப் புகழ்வதற்கு எனக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்பாக இதனைக்
கருதுகிறேன் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த Beno என்ற இளம்பெண் கூறியுள்ளார். என்னையும்,
நான் வளர்த்துக் கொண்ட திறமைகளையும் காணும் அனைவரும் கடவுளைப் புகழ்வதைக் கேட்கும்போது,
அவர் புகழைப் பரப்பும் ஒரு கருவியாக என்னைப் படைத்துள்ளார் என்று பெருமைப்படுகிறேன் என்று
கூறியுள்ளார் கல்லூரி மாணவியான Beno. 22 வயது நிரம்பிய இளம்பெண் Beno, தன் பேச்சுத்
திறமையால் 2008ம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில்
கலந்துகொள்ளச் சென்ற முதல் இந்திய மாற்றுத் திறனாளி என்ற புகழ்பெற்றவர். தற்போது சென்னை
லொயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பயின்றுவரும் Beno, பள்ளியிறுதித்
தேர்வில் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களில் முதலிடம் பெற்றவர். தனது வெற்றியைத் தமிழக
அரசு ஏற்க வேண்டும் என்று போராடியதால், இவருக்குப் பின் பள்ளியிறுதித் தேர்வில் அதிக
மதிப்பெண்கள் பெறும் மாற்றுத் திறனாளிகளுக்குத் தமிழக அரசு பரிசுகளும், கல்வித் தொகையும்
வழங்க ஆரம்பித்தது. இந்திய அரசின் நிர்வாகத் துறையில் IAS பதவியில் பணிபுரிய வேண்டும்
என்ற கனவு தனக்கு உள்ளது என்று இளம்பெண் Beno, UCAN செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.