இந்தியாவில் கிறிஸ்தவம் தளைக்க இந்துக்களின் நல்மனதே காரணம் : சீரோ மலங்கரா ரீதி தலைவர்
அக்.30, 2012. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட கிறிஸ்தவம்
இன்றும் உயிரூட்டமுடையதாக இருக்கின்றது என்றால், அதற்கு இந்திய இந்து சகோதரர்கள் வழங்கிய
ஆதரவும் பாதுகாப்புமே காரணம் என்றார் சீரோ மலங்கரா ரீதி பேராயர் பசிலியோஸ் கிளீமிஸ் தொட்டுங்கல். இந்துக்களின்
நல்மனதாலேயே இந்தியாவில் கிறிஸ்தவம் இவ்வளவு காலமும் நன்முறையில் வாழ முடிந்தது என்ற
பேராயர், மதத் தீவிரவாதம் என்பது ஒரு மதத்திற்கு மட்டுமே உரியது என நாம் குறை கூறக்கூடாது,
ஏனெனில் இது எல்லா மதங்களிலும் காணக்கிடக்கிறது என்றார். உரிமை மீறல்கள் இடம்பெறும்
சூழல்களிலும், நாம் அனைவரும் பேச்சுவார்த்தைகள் மற்றும் செபம் மூலம் அமைதி வழிகளைக் கண்டுகொண்டு
அனைத்து மதத்தினருடன் ஒன்றிணைந்து வாழ முடியும் என்றார், கர்தினாலாக திருத்தந்தையால்
அறிவிக்கப்பட்டுள்ள சீரோ மலங்கரா பேராயர் பசிலியோஸ். ஒரு மத நம்பிக்கையாளரின் மத உரிமைகள்
மதிக்கப்படாதபோது அவரின் மனித மாண்பு மீறப்படுகிறது என்பதையும் எடுத்துரைத்தார் அவர். புதிய
கர்தினாலாகத் திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ள பேராயர் கிளீமிஸ், நவம்பர் மாதம் 24ம்
தேதி அந்நிலைக்கு உயர்த்தப்படவுள்ளார்.