2012-10-29 15:19:27

திருத்தந்தை, குரோவேஷியப் பிரதமர் சந்திப்பு


அக்.29,2012. குரோவேஷியப் பிரதமர் Zoran Milanovićஐ இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தையை தனியாகச் சந்தித்துப் பேசிய பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, நாடுகளுடனான உறவுகளுக்கானத் திருப்பீடச் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் குரோவேஷியப் பிரதமர் Milanović.
இச்சந்திப்புகள் குறித்து செய்தி வெளியிட்ட திருப்பீட பத்திரிகை அலுவலகம், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளில் குரோவேஷியா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், இன்னும், இவ்விரு நாடுகள் சார்ந்த பொது விவகாரங்கள் குறித்தும் இச்சந்திப்புகளில் பேசப்பட்டதாகத் தெரிவித்தது.
ஐரோப்பாவோடு முழுவதும் ஒன்றிணைவதற்கு குரோவேஷியாவுக்கு இருக்கும் நியாயமான ஆவலுக்குத் திருப்பீடம் ஆதரவு தருவதாகவும், Dajla விவகாரம் குறித்து இவ்விரு தரப்பும் விரைவில் ஒரு தீர்வு காணும் எனவும், அப்பகுதியின், சிறப்பாக, போஸ்னியா-எர்செகொவினாவிலுள்ள குரோவேஷியர்களின் பொருளாதாரம் குறித்தும் இச்சந்திப்புகளில் பேசப்பட்டதாகவும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.







All the contents on this site are copyrighted ©.