2012-10-27 15:44:21

மியான்மாரில் தொடரும் வன்முறைகள், ஐ.நா.எச்சரிக்கை


அக்.27,2012. மியான்மாரின் மேற்கிலுள்ள Rakhine மாநிலத்தில் புத்த மதத்தினருக்கும், சிறுபான்மை Rohingya முஸ்லிம்களுக்கும் இடையில் அதிகரித்து வரும் இனரீதியான வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
Rakhine மாநிலத்தில் இடம்பெறும் வன்முறையால் இவ்விரு இனத்தவரும் தொடர்ந்து துன்பப்பட்டு வருவதால், இவ்விரு இனத்தவருக்கும் இடையே ஒப்புரவு ஏற்பட்டு அவர்கள் ஒன்றிணைந்து வாழ்வதற்கு மியான்மார் அரசு உடனடியாக முயற்சிகள் எடுக்குமாறு, மியான்மார் மனித உரிமைகள் குறித்த ஐ.நா.சிறப்புத் தொடர்பாளர் Tomás Ojea Quintana கேட்டுக் கொண்டார்.
மியான்மாரில் கடந்த ஜூன் மாதம் இவ்விரு மதத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட இனக் கலவரத்தில், இரு தரப்பிலும் 90 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 3,000க்கும் அதிகமான வீடுகள் நாசப்படுத்தப்பட்டன. தற்போதைய வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் குறைந்தது 2,000 வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளன.
Rohingya முஸ்லிம்களைத் தனது குடிமக்களாக ஏற்க மறுக்கும் மியான்மார் அரசு, அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் என்று கூறி வருகிறது.







All the contents on this site are copyrighted ©.