அக்.27,2012. இந்த உலகம் முரண்பாடுகளாலும் சவால்களாலும் நிறைந்திருந்தாலும், அதனை இறைவன்
அன்பு கூருகிறார் என்ற நம்பிக்கை இன்னும் இருப்பதால், நம்பிக்கையால் பயத்தை மேற்கொண்டு
பதட்டமில்லாத துணிவுடன் உலகை நோக்க வேண்டும் எனத் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை
லொம்பார்தி கூறினார். வத்திக்கான் தொலைக்காட்சி மற்றும் வானொலியின் வார நிகழ்ச்சியில்
இவ்வாறு கூறியுள்ளார் அருள்தந்தை லொம்பார்தி. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியின்
அவசியம் குறித்து திருஅவை சிந்தித்துள்ள கருத்துக்கள், இன்று உலகில் பல்வேறு இடங்களில்
நற்செய்தி அறிவிப்பதற்கு ஏற்படும் இன்னல்கள், மக்கள் இறைநம்பிக்கையிலிருந்து விலகிச்
செல்வதால் ஏற்படும் அனுபவங்கள் ஆகியவற்றிலிருந்து எழுந்தவை என்றும் அருள்தந்தை லொம்பார்தி
கூறியுள்ளார். உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் திருஅவைக்கு வழங்கியுள்ள செய்தியும்,
தூய ஆவியின் வல்லமையிலும் உயிர்த்த கிறிஸ்துவின் பிரசன்னத்திலும் இறைவனில் நம்பிக்கை
வைப்பதை அடிப்படையாகக் கொண்ட அர்ப்பணமும் நம்பிக்கையும் நிறைந்த வார்த்தைகளாக உள்ளன
என்றும் அருள்தந்தை லொம்பார்தி தெரிவித்துள்ளார்.