2012-10-24 15:29:58

புதிதாக நிறுவப்பட்டுள்ள குழந்தைகள் மருத்துவமனை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு அர்ப்பணமாக்கப்பட்டுள்ளது


அக்.24,2012. உலகில் உள்ள அனைத்துக் குழந்தைகள் மீது, சிறப்பாக, உதவிகள் ஏதும் பெறமுடியாமல் துன்புறும் குழந்தைகள் மீது திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கொண்டிருக்கும் அன்பை இந்த உலகம் அறியும் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே கூறினார்.
குழந்தைகள் நலனுக்கென உரோம் நகரில் புகழ்பெற்ற பணியாற்றிவரும் Bambino Gesù மருத்துவமனையின் புதியதொரு கிளையை இப்புதனன்று திறந்துவைத்துப் பேசிய கர்தினால் பெர்தோனே இவ்வாறு கூறினார்.
உரோம் நகர் சுற்றுச்சுவருக்கு வெளியே அமைந்திருக்கும் புனித பவுல் பசிலிக்காவிற்கு அருகே புதிதாக நிறுவப்பட்டுள்ள இக்குழந்தைகள் மருத்துவமனை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு அர்ப்பணமாக்கப்பட்டுள்ளது என்பதையும் கர்தினால் பெர்தோனே இத்திறப்பு விழாவில் தெரிவித்தார்.
இப்புதிய மருத்துவமனை தன் பெயரால் இயங்கவிருப்பதற்கு திருத்தந்தை தன் மகிழ்வான ஒப்புதலைத் தெரிவித்ததோடு, இம்மருத்துவமனை உருவாக பாடுபட்டோர், மற்றும் இங்கு பணிபுரிவோர், இங்கு மருத்துவ உதவிகள் பெற வரும் குழந்தைகள் அனைவருக்கும் தன் ஆசீரை வழங்குவதாக திருத்தந்தை கூறியதை திருப்பீடச் செயலர் இவ்விழாவில் அறிவித்தார்.
143 ஆண்டுகளுக்கு முன்னர் Salviati என்ற குடும்பத்தினரின் முயற்சியால் நான்கு அறைகளையும், பன்னிரு படுக்கைகளையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட BG மருத்துவமனையின் வரலாற்றை, கர்தினால் பெர்தோனே தன் உரையில் மீண்டும் நினைவு கூர்ந்தார்.








All the contents on this site are copyrighted ©.