அக்.22,2012. அனைத்துப் புனிதர்களின் அரசியான மரியன்னையின் தாயன்புள்ள பரிந்துரைக்கு
இன்றைய நற்செய்திப் பணியாளர்களையும், சிறப்பு மாமன்றத்தில் கலந்துகொள்ளும் ஆயர்களையும்
நாம் ஒப்புக்கொடுப்போம் என்று திருத்தந்தை கூறினார். இஞ்ஞாயிறன்று ஏழு அருளாளர்களைப்
புனிதர்களாக உயர்த்திய திருச்சடங்கையும், திருப்பலியையும் நிறைவேற்றிய திருத்தந்தை, இறுதியில்
வழங்கிய மூவேளை செப உரையில் இவ்வாறு கூறினார். பிரான்ஸ் நாட்டு லூர்து அன்னைத் திருத்தலத்தில்
ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைக் குறித்து மூவேளை செப உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை,
இவ்வெள்ளப்பெருக்கால் துன்புறும் மக்களையும் அன்னை மரியின் பாதுகாவலில் ஒப்படைப்பதாகக்
கூறினார். ஏழு அருளாளர்கள் புனிதர்களாக உயர்த்தப்பட்ட திருச்சடங்கில் கலந்து கொண்ட
பன்னாட்டவரையும் வெவ்வேறு மொழிகளில் வாழ்த்தியத் திருத்தந்தை, மூவேளை செப உரைக்குப் பின்,
அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.