"Vatileaks"வழக்கில் திருத்தந்தையின் தனிப்பட்ட உதவியாளர் Paolo
Gabrieleக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பின் முழு விவரங்கள்
அக்.24,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தனிப்பட்டக் கடிதங்களை வெளி உலகிற்கு
வெளியிட்ட "Vatileaks" வழக்கில் திருத்தந்தையின் தனிப்பட்ட உதவியாளர் Paolo Gabrieleக்கு
அளிக்கப்பட்ட தீர்ப்பின் முழு விவரங்கள் இச்செவ்வாயன்று வத்திக்கானில் வெளியிடப்பட்டன. 15
பக்கங்கள் அடங்கிய இந்த விவரங்களை வெளியிட்டுப் பேசிய திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை
Federico Lombardi, இவ்வழக்கில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் வத்திக்கான் கணணிப் பொறியாளர்
Claudio Sciarpelletti என்பவர் வருகிற நவம்பர் 5ம் தேதி விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்
என்று கூறினார். திருத்தந்தையின் தனிப்பட்ட ஆவணங்களின் பிரதிகளைத் திருடிய குற்றத்திற்காக,
அவரது தனிப்பட்ட உதவியாளர் Gabriele இம்மாதம் 6ம் தேதி 18 மாதம் சிறை தண்டனைக்குத் தீர்ப்பளிக்கப்பட்டார். Gabriele
அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனையைத் திருத்தந்தை மன்னிக்கும் வாய்ப்பு உள்ளதென்றும்,
இதுபற்றிய முடிவுகள் எப்போது வெளிவரும் என்பது வத்திக்கானைப் பொறுத்தது என்றும் அருள்தந்தை
லொம்பார்தி செய்தியாளர்களிடம் கூறினார்.