2012-10-22 16:12:15

அனைத்துலக திருவழிபாட்டு இசை மற்றும் கலை விழா உரோம் நகரில் நடைபெறும்


அக்.22,2012. அனைத்துலக திருவழிபாட்டு இசை மற்றும் கலை விழா வருகிற நவம்பர் மாதம் 2ம் தேதி முதல் 13ம் தேதி முடிய உரோம் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவழிபாட்டு இசை மற்றும் கலை அறக்கட்டளையின் தலைவரான கர்தினால் Angelo Comastri இவ்விழாவைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, நம்பிக்கை எனும் அடிப்படை உணர்விலிருந்து வெளிப்படும் திருவழிபாட்டு இசை, மக்கள் மனதில் நம்பிக்கையை இன்னும் ஆழப்படுத்துகிறது என்று கூறினார்.
இவ்விழா நாட்களில் ஏழு இசைக் கச்சேரிகள் நடைபெறும் என்றும், இவ்வாண்டின் இசை மற்றும் கலை வெளிப்பாடுகள் நம்பிக்கை ஆண்டு என்ற மையக் கருத்துடன் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 2ம் தேதி புனித லொயோலா இஞ்ஞாசியார் பேராலயத்தில் நடைபெறும் இசைக் கச்சேரியுடன் ஆரம்பமாகும் இவ்விழா, உரோம் நகரில் உள்ள பல்வேறு முக்கிய பேராலயங்களில் தொடரும் என்றும், நவம்பர் 13ம் தேதி நடைபெறும் இறுதி இசை நிகழ்ச்சிக்கும், இறுதித் திருப்பலிக்கும் கர்தினால் Comastri தலைமை ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.