உலகில் அடிமைத் தொழிலாளர் எண்ணிக்கை முன்பிருந்ததைவிட தற்போது அதிகம்
அக்.20,2012. உலகில் தற்போது 2 கோடியே 70 இலட்சம் பேர் அடிமைத் தொழிலாளிகளாய் இருப்பதாக
Free the Slaves என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்ரிக்கக் கண்டத்திலிருந்து அமெரிக்காவுக்கும்,
கரீபியன் தீவுகளுக்கும் அடிமைகளாக ஏற்றுமதியானவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட இது இரண்டு
மடங்குக்கும் அதிகம் என்று இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வேலை கிடைக்கும் என்ற
நம்பிக்கையில் சொத்துக்களை அடமானம் வைத்துவிட்டு, கள்ளத்தோணி ஏறி வெளிநாட்டுக்கு வந்த
பின்னர், பயண ஆவணங்களையும் பறிகொடுத்த நிலையில், வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக
ஓர் அடுப்படியில் ஓய்வு உறக்கம் இன்றி வேலைபார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளியும்கூட இந்தக்
காலத்து அடிமைதான் என்கிறது இந்த அமைப்பு. 16ம் நூற்றாண்டு தொடங்கி 19ம் நூற்றாண்டின்
ஆரம்பம்வரை ஆப்ரிக்காவிலிருந்து பிற கண்டங்களுக்கு கப்பல்களில் ஏற்றி அனுப்பப்பட்ட மக்களின்
மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய ஒரு கோடியே 25 இலட்சம் என்று மதிப்பிடப்படுகிறது. ஆகவே
தற்போதைய அடிமைகளின் எண்ணிக்கை இதனைவிட இரு மடங்குக்கும் அதிகம் என்று தெரியவருகிறது.