புனிதர் பட்டமளிப்பு திருவழிபாட்டுச் சடங்கில் மாற்றம்
அக்.17,2012. திருப்பலியின் ஒருங்கிணைந்த தன்மையைக் காக்கும் நோக்கத்திலும், புனிதர்
பட்டமளிப்பு நிகழ்வின் பொருளைச் சிறப்பாகக் காட்டும் எண்ணத்திலும் புனிதர் பட்டமளிப்பு
திருவழிபாட்டுச் சடங்கில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப்
பொறுப்பான பேரருட்திரு Guido Marini கூறினார். அக்டோபர் 21ம் தேதி வருகிற ஞாயிற்றுக்கிழமையன்று
ஏழு அருளாளர்கள் புனிதர்களாக அறிவிக்கப்படும் நிகழ்வு அன்றையத் திருப்பலிக்கு முன்னர்
இடம்பெறும் என அவர் அறிவித்தார். இந்த மாற்றத்தைக் கொண்டுவந்துள்ள திருத்தந்தை, திருப்பலியின்போது
புதிய கர்தினால்களுக்கு மோதிரம் வழங்கும் சடங்கையும், புதிய பேராயர்களுக்குப் பால்யம்
வழங்கும் சடங்கையும் நிறுத்திவிட்டார் என்றும் பேரருட்திரு Marini கூறினார். இதற்கு
முன்னர் புனிதர் பட்டமளிப்புத் திருவழிபாட்டுச் சடங்கு திருப்பலியின்போது இடம்பெற்றது.