திருத்தந்தை : செல்வர்கள் இறையாட்சியில் நுழைவது கடினமாக இருந்தாலும் அது இயலக்கூடியதே
அக்.15,2012. இறையாட்சிக்குப் பணிபுரிவதற்குச் செல்வங்கள் தடைகளை முன்வைக்காவிட்டாலும்,
மனித சமுதாயத்தின் உள்ளார்ந்த தேவைகளை நிறைவேற்றும் வழிகளில் செல்வம் செய்ய இயலாததை கிறிஸ்துவின்
அன்பு நிறைவேற்றுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். இஞ்ஞாயிறு நண்பகலில்
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறத்தாழ முப்பதாயிரம் விசுவாசிகளுக்கு
மூவேளை செப உரை நிகழ்த்திய திருத்தந்தை, நிறைய செல்வங்கள் வைத்திருக்கும் மனிதரின் இதயத்தைக்
கடவுளால் வெல்ல முடியும் என்றும் கூறினார். கிறிஸ்துவைப் பின்செல்ல விரும்பிய இளம்
செல்வர் ஒருவர் முகம்வாடி வருத்தத்தோடு திரும்பிச்சென்றதை விளக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி
வாசகத்தை மையமாக வைத்து மூவேளை செப உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை. கடவுளின்
கட்டளைகள் அனைத்தையும் இளமைமுதல் கடைப்பிடித்துவந்த அந்த இளைஞர் உண்மையான மகிழ்ச்சியைக்
கண்டடையாததால் இயேசுவிடம் வந்து நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்
எனக் கேட்டார் என்றும் திருத்தந்தை கூறினார். ஒவ்வொருவரையும் போலவே இந்தச் செல்வரும்
ஒருபக்கம் நிலைவாழ்வின் முழுமை நோக்கிக் கவரப்பட்டார், மறுபக்கம், தனது செல்வத்தைச் சார்ந்து
வாழ்ந்த அந்த இளைஞர் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன்மூலம் நிலைவாழ்வை வாங்கிக்
கொள்ளலாம் என்று நினைத்தார், எனவேதான் தனக்கு உள்ளவற்றையெல்லாம் விற்று ஏழைகளுக்குக்
கொடுத்துவிட்டுத் தன்னைப் பின்செல்லுமாறு இயேசு சொன்னபோது அதைப் புறக்கணித்தார் என்றும்
திருத்தந்தை கூறினார். செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட, ஊசியின் காதில் ஒட்டகம்
நுழைவது எளிது என்று எச்சரித்த திருத்தந்தை, இது மனிதரால் இயலாதது, ஆனால் கடவுளுக்கு
எல்லாம் இயலக்கூடியதே என்றும் கூறினார்.