2012-10-15 16:30:59

கவிதைக் கனவுகள் – நான் யாரைக் குறை சொல்வது? (கவிஞர் Nasir Khusraw)


ஒருநாள் ஒரு கழுகு
மலைச் சிகரத்திலிருந்து எழுந்து
கர்வத்தோடு தன் சிறகை
விரித்து வானத்தில் உயரே
பறந்தது.

தன் விரிந்த இறகுகளைப்
பார்த்து மெச்சியபடி கூறியது:
இன்று பூமியின் முகம்
என் சிறகுகளின் கீழே
கிடக்கிறது.

நான் மேல் நோக்கிப்
பறந்தால்
சூரியனுக்கு அப்பால்
செல்ல முடியும்.
நான் கீழே
பார்வையைச் செலுத்தினால்
கடலுக்கு அடியில் இருக்கும்
அணுவைக்கூடப் பார்க்க முடியும்.
இப்படிப் பெருமையடித்துக் கொண்டு
அது பறந்து கொண்டிருந்தபோது
வில்லில் வல்லவன் ஒருவன்
அதைநோக்கி அம்பு எய்தான்.
கழுகின் சிறகில் தைத்த அம்பு,
அதை வானத்திலிருந்து
பூமிக்குக் கொண்டு வந்தது.

மண்ணில் விழுந்த கழுகு
சிறகடித்துக் கொண்டு
மீனைப்போல் துடித்தது.
ஒரு சின்ன இரும்புத் துண்டுக்கும்
மரக் குச்சிக்கும்
எப்படி இப்படி வேகமாகப் பறந்து தாக்கும்
வல்லமை கிடைத்தது என்று
வியந்தது.
அது அம்பை உற்றுப் பார்த்தது.
அதில் தன் சொந்த
இறகுகளைக் கண்டது.

அது கூறியது:
நான் யாரைக் குறை சொல்வது
நமக்கு நேர்வதெல்லாம்
நம்மால் நேர்வதே.







All the contents on this site are copyrighted ©.