மாமன்றத் தந்தையர் : பல்சமயச் சமூகங்களில் கத்தோலிக்கர் வாழும் முறைகள்
அக்.13,2012. 232 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்ட இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின்
இவ்வெள்ளி மாலைப் பொது அமர்வில் உரையாற்றிய சுவிட்சர்லாந்து நாட்டின், பேசில் பல்கலைக்கழக
நுண்உயிரியல் பேராசிரியரும் திருப்பீட அறிவியல் கழகத்தின் தலைவருமான Werner Arber, அறிவியலுக்கும்
மதநம்பிக்கைக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விளக்கினார். இப்பொது அமர்வில் பேசிய
கானடா நாட்டு ஆயர் Brian J. Dunn, குருக்களின் பாலியல் முறைகேடுகளால் திருஅவைமீது ஏற்பட்டுள்ள
அவநம்பிக்கை மற்றும் ஏமாற்றங்களைப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி அகற்ற வேண்டுமெனக்
கேட்டுக் கொண்டார். இம்மாமன்றத்தில் பேசிய திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர்
கர்தினால் ஜான் லூயி தவ்ரான், கத்தோலிக்கருக்கு, குறிப்பாக, பல்சமயச் சமூகங்களில் வாழும்
கத்தோலிக்கருக்குத் தங்களது மதத் தனித்துவம் குறித்த தெளிவான புரிதல் அவசியம் என்பதை
வலியுறுத்தினார். இன்னும், இப்பொது அமர்வில் பேசிய வல்லுனர் ஒருவர், புனிதம், நிதானம்
மற்றும் விசுவாசத்துக்குப் பொதுப்படையாகச் சான்று பகருவதற்கான துணிவு ஆகியவற்றில் வளர,
உலகாயுதப்போக்கு மேலோங்கி நிற்கும் மேற்குலகுக்கு, முஸ்லீம் குடியேற்றதாரர்கள் உதவுகிறார்கள்
என்று தெரிவித்தார்.