2012-10-13 16:01:18

திருத்தந்தை : ஆயர்கள் மாமன்றம் எம்மாவு அனுபவம்


அக்.13,2012. கிறிஸ்தவ ஒன்றிப்பில் வெளிப்படையாக முன்னேறுவதற்கு இயேசு ஆண்டவர் உதவுவார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொள்வோர், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் கலந்து கொண்டோர், உலக ஆயர் பேரவைகளின் தலைவர்கள் என ஏறக்குறைய 500 பேருடன் இவ்வெள்ளியன்று மதிய உணவை அருந்திய பின்னர் பேசிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இந்த மதிய உணவின்போது, தனக்கு ஒருபக்கம் ஆங்லிக்கன் பேராயரும், அடுத்த பக்கம் கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தலைவரும் அமர்ந்து உணவருந்தியதை மகிழ்ச்சியோடு குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த ஒன்றிப்பானது, நாம் ஒன்றிப்பை நோக்கிச் சேர்ந்து நடக்கிறோம் என்பதைக் காட்டுகின்றது என்று கூறினார்.
Synodus என்பது சேர்ந்து நடப்பதாகும், அன்று எம்மாவுசுக்கு நம் ஆண்டவர் இரண்டு சீடர்களோடு சேர்ந்து நடந்ததை இந்த ஆயர்கள் மாமன்றம் தனக்கு நினைவூட்டுகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
மேலும், இந்த மதிய விருந்து காரணமாக, அன்றைய மாலைப் பொது அமர்வு 4.30 மணிக்குப் பதிலாக 5.45 மணிக்குத் தொடங்கும் எனவும் திருத்தந்தை அறிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.