இந்திய நிலமற்ற விவசாயிகளின் போராட்டத்துக்கு வெற்றி
அக்.13,2012. டெல்லி நோக்கி பேரணி நடத்திய மத்திய பிரதேச மாநிலத்தின் ஐம்பதாயிரத்துக்கு
மேற்பட்ட நிலமற்ற மற்றும் வீடற்ற விவசாய மக்களுக்கு நிலம் வழங்க மத்திய அரசு ஒப்புதல்
தெரிவித்துள்ளதன்பேரில் தங்களது போராட்டத்தை இவ்வெள்ளியன்று அவர்கள் நிறுத்திக் கொண்டனர்.
நிலச்சீர்திருத்தம் கோரி இம்மக்கள் நடத்திய போராட்டத்திற்குத் தலைமை வகித்த P. V.
Rajagopal, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் இரமேசைச் சந்தித்ததையொட்டி இம்மக்களின்
நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.
கிராமப்புறச சமூகங்களின் நிலமற்ற மற்றும் சிறு விவசாயிகள் சார்பாக நிலம் மற்றும் வன உரிமைகளைத்
தங்களுக்கு வழங்கக் கோரி Ekta Parishad என்ற நிலம் மற்றும் வன உரிமைகள் சமூக இயக்கம்
50,000 விவசாயிகளுடன் குவாலியரிலிருந்து டெல்லி நோக்கி நீண்ட பேரணியை மேற்கொண்டது. வறுமை
குறைப்பு, நிலம் மற்றும் வாழ்வாதார உரிமைகள், அனைத்து மக்களின் சுதந்திரம் போன்ற கோரிக்கைகளை
வலியுறுத்திய அவர்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.