இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதிலிருந்து இந்தியா பின்வாங்காது
அக்.12,2012. இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும், பாதுகாப்புடனும் வாழ்வதற்கு உதவ
வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து இந்தியா பின்வாங்காது என்று இந்திய பிரதமர் மன்மோகன்
சிங் தங்களிடம் உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தர் தெரிவித்தார். சில
தினங்களுக்கு முன்பு, இலங்கை அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ டெல்லியில் இந்தியப் பிரதமருடன்
ஆலோசனை நடத்திச் சென்ற பிறகு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு
அழைத்திருந்தது. இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது, மீள்குடியேற்றம், இலங்கை
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகள், இந்தியாவின்
பங்களிப்பு உட்பட பல்வேறு தலைப்புகள் இவ்வியாழக்கிழமை மாலை பிரதமர் மன்மோகன் சிங்குடன்
நடத்தப்பட்ட சந்திப்பில் விவாதிக்கப்பட்டன. இலங்கைப் பிரச்சனையில் இந்தியா பொறுமை
காத்து வருவதாகவும், அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.
கிருஷ்ணா தங்களிடம் கூறியதாகவும் சம்பந்தர் தெரிவித்தார்.