விண்ணில் பிரமாண்ட கருந்துளை, இந்திய அறிவியலாளர் கண்டுபிடிப்பு
அக்.10,2012. கன்னிராசி விண்மீன் மண்டலத்திற்கு கோடிக்கணக்கான கிலோ மீட்டருக்கு அப்பால்,
விண்ணில் உள்ள வாயு, தூசி, ஒளி போன்றவற்றை, தன்பக்கம் ஈர்க்கும் பிளாக் ஹோல்ஸ் என்ற கருந்துளையை
இந்திய அறிவியலாளர் தலைமையிலான குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது. பிரிட்டன் கேம்ப்ரிட்ஜை
சேர்ந்த, இந்திய அறிவியலாளர் Manda Banerji தலைமையிலான குழுவினர் "ULASJ1234+0907' என்ற
சக்தி வாய்ந்த கருந்துளையை கண்டறிந்துள்ளனர். விண்ணில் இருக்கும் இந்த கருந்துளைகள்,
அடர்த்தியான தூசியால் மூடப்பட்டிருப்பதால், இதற்கு முன் இதனைக் கண்டறிவதில் சிரமம் இருந்தது.
ஆனால், தற்போது அதிநவீன தொலைநோக்கியைப் பயன்படுத்தி, ஆராய்ச்சி செய்ததில், இவை, அதிகளவில்
கதிர் வீச்சை வெளியிடுவது தெரிந்தது என்று பானர்ஜி கூறினார். இது பூமியிலிருந்து மிகவும்
தொலைவில் இருப்பதால், இதன் ஒளி, பூமியை வந்தடைய 1100 கோடி ஆண்டுகள் ஆகும். இது, சூரியனைவிட
ஆயிரம் கோடி மடங்கு அதிக அடர்த்தியானது. நமது பால்வழி மண்டலத்தை விட, பத்தாயிரம் மடங்கு
அடர்த்தி மிக்கது. இதுபோன்ற சக்தி வாய்ந்த, நானூறு கருந்துளைகள் விண்ணில் இருக்கக்கூடும்.
அனைத்து விண்மீன் மண்டலங்களிலும், இவ்வகை பெரியக் கருந்துளைகள் இருக்கும். அவை, அருகிலுள்ள
விண்மீன் மண்டலங்களோடு மோதி, அந்த விண்மீன் துகள்களை, தன்னுள் இழுத்துக் கொள்ளும் என்றும்
பானர்ஜி கூறினார்.