கத்தோலிக்கத் துறவு சபையின் கல்விப் பணியைப் பாராட்டி பாகிஸ்தான் மாநில அரசு பரிசு
அக்.04,2012. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் ஆற்றி வரும் கல்விப்பணிக்கு நன்றி தெரிவிக்கும்
விதமாக ஒன்றரை ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது அந்நாட்டின் சிந்து மாநில அரசு. கராச்சியின்
மத்தியப் பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை 99ஆண்டு குத்தகைக்கு இயேசு மற்றும் மரியன்னை
பெண் துறவு சபைக்கு வழங்கிய மாநில அரசு, இது அரசின் வெகுமதி எனவும் அறிவித்துள்ளது. இந்நிலத்தின்
அருகிலேயே 1952ம் ஆண்டு முதல், பெண்களுக்கான கல்விக்கூடத்தை நடத்தி வரும் இத்துறவு சபையினர்,
அப்பள்ளியை மேலும் விரிவாக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இயேசு மற்றும் மரியன்னை துறவு
சபையினர் 1856ம் ஆண்டு தற்போதைய பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்து லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத்
உட்பட ஆறு முக்கிய நகர்களில் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். இக்கன்னியர்கள் நடத்தும் பள்ளியிலேயே
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.