திருத்தந்தை : கத்தோலிக்கரல்லாதவர் நல்லது செய்யும் போது அகமகிழுங்கள்
அக்.01,2012. கத்தோலிக்கரல்லாதவர் நல்லதைச் செய்யும்போது அல்லது உண்மையானதைத் தழுவிக்கொள்ளும்போது
கத்தோலிக்கர் மகிழ்ச்சியடைய வேணடுமெனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். இயேசுவின்
சீடராக இல்லாத ஒருவர், இயேசுவின் பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, இளமையும் இயேசுவின்மீது
தீவிரப்பற்றும் கொண்ட திருத்தூதர் யோவான் அவரைத் தடுக்கப் பார்த்தார், ஆனால் இயேசு அதற்கு
அனுமதிக்கவில்லை. இந்த நிகழ்வு குறித்து விவரிக்கும் புனித மாற்கு நற்செய்திப் பகுதியை
விளக்கியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை. காஸ்தெல் கந்தோல்ஃபோவிலுள்ள பாப்பிறைகளின்
கோடைவிடுமுறை இல்ல வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு
ஆற்றிய மூவேளை செப உரையில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, கத்தோலிக்கத் திருஅவையில்
கத்தோலிக்கம் இல்லாத ஒன்றை ஒருவர் கண்டறிய முடிவது போல, கத்தோலிக்கத் திருஅவைக்கு வெளியே
கத்தோலிக்கமாக இருப்பதை ஒருவரால் கண்டறிய முடியும் என்று புனித அகுஸ்தீன் சொன்னதையும்
சுட்டிக் காட்டினார். திருஅவைக்கு வெளியே இருக்கும் யாராவது கிறிஸ்துவின் பெயரால்
நன்மையானதைச் செய்யும்போது திருஅவையின் உறுப்பினர்கள் பொறாமை கொள்ளாமல் அகமகிழ வேண்டும்,
அதேசமயம் இவ்வாறு நல்லதைச் செய்பவர்கள் சரியான எண்ணத்தோடும் மரியாதையோடும் செய்ய வேண்டுமெனக்
கூறினார் திருத்தந்தை. ஒரு மறைபோதகருக்கு ஒரு குவளைத் தண்ணீர்க் கொடுப்பது போன்ற சிறிய
சிறிய செயல்களால் இறையாட்சியோடு மற்றவர்கள் ஒத்துழைக்கும்போது நல்லதும் அற்புதம் நிறைந்த
செயல்களும்கூட திருஅவைக்கு வெளியே நடக்கும் என்று இயேசு தம் திருத்தூதர்களுக்கு விளக்க
விரும்பினார் எனவும் திருத்தந்தை கூறினார். உடனிருக்கும் சமயத்தவர் தூய்மைத்தனத்தையும்
நன்மைத்தனத்தையும் அடையும்போது கத்தோலிக்கர் கோபம் கொள்ளக்கூடும், எனவே திருஅவைக்குள்ளே
பொறாமைப்படுவதை விட்டுவிட்டு ஒருவர் ஒருவரை எப்பொழுதும் புகழவும் மதிக்கவும் வேண்டும்,
திருஅவையிலும் உலகிலும் நம் ஆண்டவர் ஆற்றும் அருஞ்செயல்களுக்காக அவரைப் புகழ்வோம் என்றும்
கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.