2012-10-01 16:02:45

கேப்பாபிலவு மக்களுக்கான உதவிகளை இராணுவம் தடுக்கிறது


அக்.01, 2012. இலங்கையில் மனிக்பாம் முகாம் மூடப்பட்ட நிலையில் அங்கிருந்து சீனியாமோட்டை என்ற காட்டுப்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்ட கேப்பாபிலவு மக்களுக்கு வெளியாரின் நிவாரண உதவிகள் கிடைப்பதிலும் இராணுவத்தினர் இடையூறுகளை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சொந்த இடத்தில் குடியேற்றப்படாது வேறு இடத்துக்கு அனுப்பப்பட்ட இந்த மக்களுக்கு இன்னும் எந்தவிதமான அரசு உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் அக்கட்சியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் சுட்டிக்காட்டினார்.
அரசின் உதவிகள் எதுவும் கிடைக்காத நிலையில், அம்மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க இஞ்ஞாயிற்றுக்கிழமை தாங்கள் ஏற்பாடு செய்திருந்தபோது, அதற்காக காத்திருந்த மக்களிடம் அப்படி நிவாரணங்கள் எதுவும் வழங்கப்படாது என்று கூறி இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன் கூறினார்.
மக்கள் தாங்களாகவே வீடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், அம்மக்களின் பிரச்சனைகள் வெளியுலகுக்குத் தெரியாதவாறு தடுக்கும் முயற்சியில் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.








All the contents on this site are copyrighted ©.