2012-09-29 15:21:56

பொதுக்காலம் - 26ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


செப்.29,2012 RealAudioMP3 இங்கு வானொலியில் என்னோடு பணியாற்றும் நண்பர்களுடன் ஞாயிறு சிந்தனையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். "இந்த ஞாயிறு நற்செய்தியை நற்செய்தின்னு சொல்றதுக்கே தயக்கமாயிருக்கு, ஏன்னா, இயேசு கையை, காலை வேட்டிகிறதைப் பத்திக் கொஞ்சம் கடுமையாப் பேசியிருக்கார்" என்று சொன்னேன்.
அந்த நற்செய்திப் பகுதியைப் பார்த்த நண்பர்கள், "நல்ல வேளை, அவங்கவுங்க தங்களுடைய கையையோ, காலையோ வெட்டிக்கிறதைப் பத்திதானே இயேசு சொல்லியிருக்கார், அடுத்தவங்க கையையோ, காலையோ வெட்டச் சொல்லலியே." என்று நகைச்சுவைத் கலந்த தொனியில் சொன்னார்கள்.
அவர்கள் சொன்ன நகைச்சுவை கூற்று என் சிந்தனையை ஆரம்பித்து வைத்தது. இயேசு வாழ்ந்த காலம், வாழ்ந்த சமுதாயம் எளிதாக கையை, காலை வெட்டுகின்ற சமுதாயம். நம் சினிமாக்களில் "ஆவூன்னா அரிவாளைத் தூக்கிடுறாங்கப்பா" என்று நகைச்சுவை நடிகர்கள் குறிப்பிடுவது நினைவுக்கு வரலாம். பழிக்குப் பழி வாங்குவதில் அதிகத் தீவிரமாய் இருந்தவர்கள் யூதர்கள். இதனால்தான், இயேசுவே அவர்களைப் பார்த்து "‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்." (மத்தேயு 5: 38-39) என்று அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் மாறுபட்ட பாடங்களைச் சொல்லித்தர ஆரம்பித்தார். அவர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
மறுகன்னத்தைக் காட்டச் சொல்லும் இயேசுவை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. நம் கோவில்களில் காணப்படும் இயேசு எப்போதும் சாந்தமாக, அமைதியாக ஆசீர் அளிக்கும் இயேசுவாகவே பார்த்திருக்கிறோம். எனவே, அவர் சாந்தமான மொழிகளில் பேசுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. அனால், கோபமாக, கடுமையாகப் பேசும் இயேசுவைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்தான்.
சாட்டையடிபட்டு சிலுவையில் தொங்கும் இயேசுவைப் புரிந்துகொள்ள முடிகிறது. அனால், சாட்டையைக் கையில் எடுத்துக்கொண்டு, கோவிலிலிருந்து வியாபாரிகளை விரட்டினாரே, அந்த இயேசுவைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்தான்.
நாம் புரிந்துகொள்ளக் கஷ்டப்படும் இயேசுவை இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கிறோம். இந்த இயேசுவைப் புரிந்து கொள்ள, அவர் சொல்லும் வார்த்தைகள் எந்த பின்னணியிலிருந்து வருகின்றன என்று தேடிப் பார்க்கவேண்டும். பின்னணியை விட்டுவிட்டு இயேசுவின் வார்த்தைகளைத் தனியே எடுத்து வெறும் மேற்கோளாக ஒரு சிலர் பேசும்போது, நான் சங்கடத்தில் நெளிந்ததுண்டு. மறு கன்னத்தைக் காட்டு என்று கூறும் இயேசு, தலைமை குருவின் ஊழியன் அவரை அறையும்போது, மறு கன்னத்தைக் காட்டவில்லையே. மாறாக, அவனிடம், என்னை ஏன் அறைகிறாய் என்று கேள்வி கேட்டார். சூழ்நிலை, பின்னணி இவற்றோடு இயேசுவின் வாழ்க்கையையும், அவரது கூற்றுக்களையும் பார்ப்பது பயனளிக்கும்.
இன்று இயேசு நற்செய்தியில் கூறும் வார்த்தைகள் நமக்கு ஒரு சவாலாகத் தெரிகிறது. இந்த வார்த்தைகளுக்குப் பின்னணி என்ன? சென்ற வார நற்செய்தியின் தொடர்ச்சியாக நமது ஞாயிறு நற்செய்திப் பகுதி அமைந்துள்ளது. சென்ற வாரம் ஒரு குழந்தையை மையமாக்கி, இயேசு தன் சீடர்களுக்குச் சவால் விடுத்தார். இவர்களில் ஒருவரை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுங்கள், இவர்களைப் போல் மாறுங்கள் என்று கூறிய இயேசு, இந்தக் குழந்தைகளுக்குப் பெரியோர் மூலம் ஏற்படும் அவலங்களை நினைத்துப் பார்க்கிறார். சூடாகிப்போகிறார். குழந்தைகள் மட்டும் அல்ல, குழந்தை மனம் கொண்டவர்கள், ஏழைகள், சமுதாயத்தில் நலிந்தவர்கள் அனைவரையும் மக்கள் நடத்தும் முறை இயேசுவைப் பாதித்திருக்க வேண்டும். எனவேதான் அவர் "என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.” மாற்கு நற்செய்தி 9: 42 என்ற வெப்பமான வார்த்தைகளைச் சொல்கிறார்.
சமுதாயத்திற்குக் கேடு விளைவிக்கும் அங்கம் நீக்கப்பட வேண்டும். இப்படி சமுதாயத்திலிருந்து ஒவ்வொருவரையாக கடலில் அழுத்தினால், கடல் நிறைந்து விடும், நிலம் காலியாகிவிடும். இந்நிலை ஏற்படாமல் தடுக்க, ஒரு மாற்று வழியை அடுத்த வாக்கியங்களில் இயேசு கூறுகிறார். சமுதாயத்தைக் குலைக்கும் ஒரு நஞ்சாக மாறுவதற்கு பதில், ஒவ்வொருவரும் தங்களைப்பற்றி யோசித்து, அவரவர் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவேண்டும். அப்படி மாற்றுவதற்கு, அவரவர் உடலில் இருக்கும் தடைகளை நீக்கவேண்டும். இந்தக் கருத்தை வலியுறுத்தவே, கண்ணைப் பிடுங்கி விடுங்கள், கை, கால் இவைகளை வெட்டிப் போடுங்கள் என்று இயேசு கோபமாகச் சொல்வதுபோல் தெரிகிறது.
ஆஸ்திரேலியாவில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்வு என் நினைவுக்கு வருகிறது. இரயில் துறையில் பணி புரிந்த ஒருவர், தனியே எதோ ஓர் இடத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது, ஒரு பாம்பு அவரது கையைக் கடித்து விடுகிறது. அது மிகவும் கொடிய நஞ்சுள்ள பாம்பு. அவர் பணிசெய்து கொண்டிருந்த இடத்திலிருந்து மருத்துவமனைக்கு எளிதில் செல்ல முடியாது. அதுவரை காத்திருந்தால், அவரது உயிர் போய்விடும் ஆபத்து இருந்ததென அவர் உணர்ந்தார். அவர் செய்தது என்ன? அருகிலிருந்த ஒரு கோடாலியை எடுத்தார். பாம்பு கடித்த தன் கையை வெட்டிக் கொண்டார். இந்நாள் வரை அவர் உயிரோடு இருக்கிறார், வேலை செய்து வருகிறார், ஒரு கையோடு. அவரைப் பொறுத்தவரை, கையை விட, உயிரைப் பெரிதாக மதித்ததால், அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்.
இது போன்ற எத்தனையோ சம்பவங்களை நாம் கேட்டிருப்போம். பல நேரங்களில் மருத்துவ மனைகளில் இந்த கேள்வி எழும்... உங்களுக்கு கை வேணுமா? உயிர் வேணுமா? கால் வேணுமா? உயிர் வேணுமா? காயப்பட்டு புரையோடிப்போன கையையோ, காலையோ வெட்டி, எத்தனையோ பேருடைய உயிரை மருத்துவர்கள் காப்பாற்றுகின்றனர். உயிரா அல்லது உறுப்பா என்ற கேள்வி எழும்போது, ஒரு கையோ, காலோ, கண்ணோ இல்லாமல் உயிர் வாழ்வது மேல் என்று எத்தனையோ பேர் முடிவெடுத்திருக்கலாம். வேறு எந்த வழியும் இல்லை என்ற கடைசி நிலையில் எடுக்கப்படும் முடிவு அது.
உயிரா, உறுப்பா என்ற கடைசி நிலை ஒரு நாளில் வரும் நிலை அல்ல. இந்த நிலை வழக்கமாக சிறுக, சிறுகத் தான் வரும். பாம்பு கடித்து கையை வெட்டிக்கொள்வது போன்ற சம்பவங்கள் மிக, மிக அரிதாக நடக்கும். ஆனால், மருத்துவமனைகளில் உயிரா, உறுப்பா என்ற கடைசி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளவர்களை நாம் ஆயிரக்கணக்கில் சந்திக்கலாம். இந்த இறுதி நிலையை அடைந்தவர்களுடைய வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால், சில பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
நீரழிவு நோய் என்று சொல்லப்படும் சர்க்கரை நோய் உள்ள ஒருவரை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். பலருக்கு அது பிறவியிலேயே வந்து சேரும் பிரச்சனை. சரி... அந்த குறை இருக்கிறதென்று கண்டு பிடித்தவுடன், கவனமாகச் செயல்படலாமே. நமது உணவுப் பழக்கங்கள், தினமும் உடற்பயிற்சி, ஒரு சில மருந்துகள் என்று காட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால், இந்தக் குறையோடு பல ஆண்டுகள் வாழமுடியும். இப்படி வாழ்வோரை நாம் அறிவோம். ஆனால், இந்தக் கட்டுப்பாடெல்லாம் இல்லாமல், அல்லது இந்த காட்டுப்பாட்டையெல்லாம் அடிக்கடி மீறி, வம்பை வாங்கியவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். கட்டுப்பாடுகள் இல்லாத வாழ்வில், திடீரென, கையிலோ, காலிலோ, ஒரு காயம் ஏற்பட்டால், அதுவும் அவர்களுக்கு வரும் மற்றொரு எச்சரிக்கை என்று எடுத்துக்கொள்ளலாம். வாழ்வை மாற்றிக்கொள்ளலாம். அந்த எச்சரிக்கையையும் கண்டுகொள்ளாமல், அவர்கள் தன்னிச்சையாக வாழும்போது, இறுதியில், மருத்துவமனைகளில் உயிரா, உறுப்பா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்.
பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டும்.
தேவையற்ற ஆபத்துக்களை வாழ்விலிருந்து நீக்க வேண்டும்...
இந்த எண்ணங்கள் எல்லாருக்குமே நல்லதுதானே!
இயேசு இந்த எண்ணங்களைத்தான் கொஞ்சம் ஆழமாக, அழுத்தமாக, கோபமாகச் சொல்லியிருக்கிறார். நம் உடலை, அதில் உள்ள உறுப்புக்களை நாம் எவ்விதம் பயன்படுத்தவேண்டும், அல்லது அவற்றை எவ்விதம் கட்டுப்படுத்த வேண்டும் என்று இயேசு சொல்லும் உண்மைகள் நம் எண்ணங்களில் ஆழமாகப் பதிய வேண்டும். அவர் கோபமாகச் சொல்கிறாரோ, சாந்தமாகச் சொல்கிறாரோ... அவர் சொல்வதில் உள்ள உண்மையை உணர்வதும், அதன் படி வாழ்வதும் நமக்கு நல்லதுதானே!
இன்று செப்டம்பர் மாத இறுதி நாள்... ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரு மாதங்களிலும் நம் நினைவுகளில் அருளாளர் அன்னை தெரேசா நிழலாடியிருப்பார். ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி, அன்னையின் பிறந்தநாளையும், செப்டம்பர் 5ம் தேதி அவர் விண்ணகத்தில் பிறந்த திருநாளையும் கொண்டாடினோம். அந்த அன்னையின் உடலில் இருந்த ஒவ்வொரு அணுவும் இறையன்பைப் பறைசாற்றியதென்பதை நாம் அறிவோம். உடல் உறுப்புக்களைக் கட்டுப்படுத்துவது பற்றி இயேசு கூறிய நற்செய்தி வார்த்தைகளைக் கேட்கும் இன்று, உடல் உறுப்புக்களை நல்வழியில் பயன்படுத்துவது பற்றி அருளாளர் அன்னை தெரேசா கூறியுள்ள அழகான எண்ணங்களுடன் நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம்.

“If your eyes are positive..
You will love the world..
If your tongue is positive,
The world will love you..”
(Mother Teresa)

"உன் கண்கள் நேர்மறையாகப் பார்த்தால், நீ உலகை நேசிப்பாய்;
உன் நாவு நேர்மறையாகப் பேசினால், உலகம் உன்னை நேசிக்கும்."








All the contents on this site are copyrighted ©.