2012-09-29 15:39:15

திருப்பீடப் பேச்சாளர் : பயணம் செய்யும் திருஅவை அன்னைமரியாவின் திருஅவை


செப்.29,2012. இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பர் மேற்கொண்ட புகழ்பெற்ற திருப்பயணத்தின் 50ம் ஆண்டு நினைவாக வருகிற அக்டோபர் 4ம் தேதி லொரேத்தோ அன்னைமரியா திருத்தலத்துக்குச் செல்லவிருக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இக்காலத்தில் திருஅவைக்காக, குறிப்பாக, வரவிருக்கும் விசுவாச ஆண்டு மற்றும் நற்செய்தி அறிவிப்பைப் புதிய வழிகளில் செய்வது குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்திற்காக இறைவனின் தாயிடம் செபிக்கும் நோக்கத்தை இந்த லொரேத்தோ திருப்பயணம் கொண்டுள்ளது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் லொரேத்தோ அன்னைமரியா திருத்தலத்துக்குச் செல்வது இது முதன்முறை அல்ல, அவர் கர்தினாலாக குறைந்தது ஏழு தடவைகளும், பாப்பிறையாக ஒரு தடவையும் சென்றுள்ளார் எனவும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் ஆரம்பமும், நிறைவும் அன்னைமரியாவின் இரண்டு முக்கிய திருவிழாக்களில்தான் இடம்பெற்றன என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், நாமும் அன்னைமரியாவின் துணையோடு அருளின் ஆண்டையும் ஆயர்கள் மாமன்றத்தையும் செலவழிப்போம் என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.