2012-09-29 15:45:59

செவ்வாயில் நீரோடைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன


செப்.29,2012. செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கி ஏழு வாரங்களே கடந்துள்ள நிலையில் நாசாவின் கியூரியாசிட்டி ஆய்வு விண்கலம் பழங்காலத்தில் செவ்வாய்க் கிரகத்தின் தரையில் நீரோடைகள் இருந்ததற்கான ஆதாரங்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளது.
செவ்வாயின் தரையில் ஊர்ந்து ஆதாரங்களைச் சேகரித்துவரும் கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பி வைத்துள்ள படங்களில் சரளைக் கற்களும் மணலும் கலந்து உருவான பாறைப் படிமங்களும் காணப்படுகின்றன.
இந்தப் பாறைப் படிமங்களில் காணப்படும் உருண்டை வடிவான குறுணிக் கற்களின் அளவையும் தன்மையையும் பார்க்கும்போது அவை நீரோட்டத்தால் வந்துள்ளதைக் காட்டுவதாக இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.
செவ்வாயின் தரையில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்டுள்ள இந்த நீரோட்டங்கள் நீண்டகாலத்துக்கு நிலைத்து இருந்திருக்கலாம் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு நாசா ஆய்வு மையத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவியலாளர்கள் கூறினர்.
பல்லாயிரம் மில்லியன் ஆண்டுகளாக இந்த நீரோட்டங்கள் செவ்வாயின் தரையில் நிலைத்து இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.