2012-09-29 15:43:19

இந்தியாவில் ஓராண்டில் 4 கோடிக்கு மேற்பட்டோர் இணையதளக் குற்றங்களால் பாதிக்கப்படுகின்றனர்


செப்.29,2012. இந்தியாவில் கடந்த 12 மாதங்களில் ஏறக்குறைய 4 கோடியே 20 இலட்சம் பேர் இணையதளக் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் ஏறத்தாழ 44,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று Norton Cybercrime அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது.
இணையதளக் குற்றங்களால் உலக அளவில் 11,000 கோடி டாலர்வரை இழப்பு ஏற்பட்டுள்ளது எனக்கூறும் அந்த அறிக்கை, இந்தியாவில் இணையதளத்தைப் பயன்படுத்தும் வயதுவந்தோரில் 66 விழுக்காட்டினர் தங்கள் வாழ்நாளில் இணையதளக் குற்றங்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கிறது.
இணையதளத்தைப் பயன்படுத்தும் வயதுவந்தோரில், ஒரு நாளைக்கு 1,15,000 பேர் வீதமும், அதாவது ஒரு நிமிடத்துக்கு 80 பேர் வீதமும் இணையதளக் குற்றங்களால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
மேலும், இந்தியாவில் 83 விழுக்காட்டினர் இணையதளக் குற்றங்கள் குறித்து அறிந்திருக்கவில்லை என்று மாநில தலைமை தகவல் ஆணையர் ஸ்ரீபதி கூறினார்.
சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியின் பல்கலைக்கழக மானியக்குழுவும், காலர் சொல்யூஷன் தனியார் அமைப்பும் இணைந்து இணையதள குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கில் பேசிய ஸ்ரீபதி இதனைத் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.