இந்தியாவில் 5 ஆண்டுகளில் 36 ஆயிரம் டன் உணவுத் தானியம் வீண்
செப்.26, 2012. எட்டுக் கோடி மக்களின் பசியைப் போக்கி இருக்க வேண்டிய 36 ஆயிரம் டன்
உணவுத் தானியங்கள் கடந்த ஐந்தாண்டுகளில், இந்தியாவில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்குகளில்
வீணடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழகத்துக்குச்
சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில், சேமித்து வைக்க முடியாமல், 2008ம் ஆண்டிலிருந்து இதுவரை
36 ஆயிரம் டன் உணவுத் தானியங்கள், பயன்படுத்த முடியாத அளவுக்கு கெட்டுப் போயின எனத் தெரிவித்துள்ளது
இக்கழகம். பூச்சி அரிப்பு, தரமற்ற உணவுத் தானியங்களைச் சேமித்து வைத்தல், போக்குவரத்தில்
ஏற்படும் கசிவு மற்றும் வெள்ளம், மனித கவனக்குறைவு போன்றவை, உணவுத் தானியங்கள் கெட்டுப்
போவதற்கும், வீணடிக்கப்படுவதற்கும் காரணமாக உள்ளன.