அண்டார்டிக் கடலில் பிளாஸ்டிக் கழிவுத் துகள்களால் மாசு
செப்.26,2012. அண்டார்டிக் பெருங்கடல் பகுதி மிகவும் அதிகமான அளவில் பிளாஸ்டிக் பொருட்களால்
மாசடைந்திருப்பதாகவும், ஒரு சதுர கிலோமிட்டர் பரப்பளவுக்கு சுமார் 40,000 பிளாஸ்டிக்
கழிவுத் துகள்கள்வரை மிதந்து கொண்டிருப்பதைக் கண்டறிந்ததாகவும் அங்குச் சென்று வந்த தனியார்
ஆராய்ச்சிக் குழு ஒன்று கவலையை வெளியிட்டுள்ளது. இந்தக் கழிவு, இயற்கையாகக் கரைய முடியாதது
என்று கூறும் அக்குழு, பல நூறாயிரம் ஆண்டுகள் வரை இந்தத் துகள்கள் கடலிலேயே தங்கியிருக்கும்
என்றும், கடைசியாக அவை உணவுச் சங்கிலித்தொடரில் சேர்ந்துவிடும் என்றும் கூறியுள்ளது.