நைஜீரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை
: பேராயர் கைகாமா
செப்.26,2012. நைஜீரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிறுத்துவதற்குப் போதுமான நடவடிக்கைகளை
எடுப்பதற்கு அரசு தவறியுள்ளது எனக் கடுமையாய்க் குற்றம்சாட்டியுள்ளார் அந்நாட்டு ஆயர்
பேரவைத் தலைவர் பேராயர் Ignatius Kaigama. கடந்த ஞாயிறன்று Bauchi நகரில் புனித யோவான்
பேராலயத்துக்கு வெளியே இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதல் குறித்து Aid to the Church
in Need என்ற பிறரன்பு நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பேராயர் கைகாமா, கிறிஸ்தவர்கள்
தங்களது மத நம்பிக்கைகளை அனுசரிப்பதற்கு இத்தாக்குதல்கள் எவ்விதத்திலும் தடையாய் இல்லையெனத்
தெரிவித்தார். குண்டுவெடிப்புத் தாக்குதல்களை நடத்தும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து
அவர்களுக்குத் தண்டனை கொடுப்பதில் அரசுத்தலைவர் Goodluck Jonathanனின் அரசு திறமையற்று
இருக்கின்றது என்றும் பேராயர் குறை கூறினார். நைஜீரியாவில் ஆலயங்கள், சந்தைகள், அரசு
மற்றும் பாதுகாப்புத்துறை கட்டிடங்கள் தாக்கப்பட்டதில் 2010ம் ஆண்டிலிருந்து இதுவரை 1400
பேர் இறந்துள்ளனர்.