பெரு கர்தினால் : விசுவாச ஆண்டு, அருள்பணியாளர்களுக்கு மனமாற்றத்தின் காலமாக இருக்க வேண்டும்
செப்.25,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் அறிவிக்கப்பட்டிருக்கும் விசுவாச
ஆண்டு, அருள்பணியாளர்களுக்கு உண்மையான மனமாற்றத்தின் காலமாக இருக்க வேண்டும், இதன்மூலம்
மற்றவர்கள் அருள்பணியாளர்களில் கடவுளின் பிரசன்னத்தைக் காண முடியும் என்று பெரு நாட்டுக்
கர்தினால் ஹூவான் லூயிஸ் சிப்பிரியானி கூறினார். உலகளாவியக் கத்தோலிக்கத் திருஅவையில்
வருகிற அக்டோபர் 11ம் தேதி தொடங்கவிருக்கும் விசுவாச ஆண்டு குறித்து லீமா உயர்மறைமாவட்ட
அருள்பணியாளர்களுக்கும் துறவிகளுக்கும் உரையாற்றிய கர்தினால் சிப்பிரியானி இவ்வாறு கூறினார். திருப்பலி
நிகழ்த்துவது, மறையுரைகளுக்குத் தயார் செய்வது, மறையுரை ஆற்றுவது ஆகியவற்றில் அருள்பணியாளர்கள்
தங்களது அகவாழ்வின் மாற்றத்தை வெளிப்படுத்த வேண்டுமெனவும் லீமா கர்தினால் சிப்பிரியானி
வலியுறுத்தினார். இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டு மற்றும்
கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏடு வெளியானதன் 20ம் ஆண்டு நிறைவுகளை முன்னிட்டு
அறிவிக்கப்பட்டிருக்கும் விசுவாச ஆண்டு 2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி தொடங்கி 2013ம்
ஆண்டு நவம்பர் 24ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று நிறைவடையும்.