செப்.24,2012. இலங்கையில் இறுதிப் போரின்போது இடம்பெயர்ந்திருந்த 3 இலட்சம் மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த
செட்டிகுளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் செப்டம்பர் 25ம் தேதியுடன், அதாவது இச்செவ்வாய்க்
கிழமையுடன் மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மனிக்பாம் முகாமில் மிஞ்சியிருந்த
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 361 குடும்பங்களையும் அவர்களது பகுதிகளுக்கு அனுப்பிவைப்பதற்கான
ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அம்மக்களிடம் ஏற்கனவே தெரிவித்திருப்பதாகவும் அதிகாரிகள்
தெரிவித்தனர். மனிக்பாம் முகாமை மூட வேண்டும் என்ற அதிகாரிகளின் முடிவினால் தாங்கள்
விருப்பமில்லாத ஒரு நிலையிலேயே வேறிடத்தில் சென்று குடியேற நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக
அங்குள்ள மக்கள் ஏற்கனவே குற்றஞ்சாட்டியுள்ளனர். முல்லைத்தீவு, கேப்பாப்புலவுப் பகுதியில்
இன்னமும் படைத்தளங்கள் அகற்றப்படாததுடன், கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கையும் பூர்த்தியாகாத
நிலையிலேயே அந்தப் பகுதி மக்களை முகாமில் இருந்து வெளியேற்றி வேறு இடங்களில் அமைக்கப்பட்ட
இடைத்தங்கல் முகாம்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.