13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் வல்லுனர்கள், பார்வையாளர்கள் அறிவிப்பு
செப்.22,2012. அக்டோபர் 7 முதல் 28 வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 13வது உலக ஆயர்கள்
மாமன்றத்தில் கலந்து கொள்ளும் 45 வல்லுனர்கள் மற்றும் 49 பார்வையாளர்களின் பெயர்களைத்
திருத்தந்தையின் ஒப்புதலுடன் இச்சனிக்கிழமை வெளியிட்டுள்ளது இம்மாமன்றச் செயலகம். வடகிழக்கு
இந்தியாவுக்கென ஷில்லாங்கிலுள்ள இறையியல் கல்லூரியின் விவிலியப் பேராசிரியர் அருள்பணி
தாமஸ் மஞ்ஞலி உட்பட இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் வல்லுனர்களாகக் கலந்துகொள்ளும்
பல துறவு சபைகளைச் சேர்ந்த அருள்தந்தையர்கள், அருள்சகோதரிகள் மற்றும் பொதுநிலையினரின்
பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தில் பார்வையாளர்களாகக்
கலந்து கொள்வோரில் அன்னைதெரேசா பிறரன்பு மறைப்பணியாளர் சபையின் தலைவர் அருள்சகோதரி மேரி
பிரேமா பியெரிக், புனே பாப்பிறை மெய்யியல் மற்றும் இறையியல் கல்லூரியில் புதிய ஏற்பாட்டுப்
பேராசிரியராகப் பணியாற்றும் அருள்சகோதரி ரேகா மேரி ஜோசப், "Jesus Youth" இயக்கத்தை ஆரம்பித்த
பத்திரிகையாளர் மனோஜ் சன்னி உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பலரின் பெயர்களும் இச்சனிக்கிழமை
வெளியிடப்பட்டுள்ளன. நற்செய்தி அறிவிப்புப்பணியை புதிய வழிகளில் செய்வது குறித்து
13வது உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறவுள்ளது.