கர்தினால் ரில்கோ : விசுவாச ஆண்டில் திருஅவை பக்த இயக்கங்களை நம்பிக்கையோடு நோக்குகின்றது
செப்.19,2012. வருகிற அக்டோபரில் தொடங்கும் விசுவாச ஆண்டில் திருஅவையின் பக்த இயக்கங்கள்
மற்றும் புதிய பக்தக் குழுக்களைத் திருஅவை மிகுந்த நம்பிக்கையோடு நோக்குகின்றது என்று
கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ரில்கோ கூறினார். லொசர்வாத்தோரே ரொமானோ திருப்பீடச் சார்பு
தினத்தாளில் இவ்வாறு கட்டுரை எழுதியுள்ள திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால்
ரில்கோ, இவ்வுலகின் புதிய சமூக-கலாச்சார அமைப்புகளில் இந்தப் பக்த இயக்கங்கள் தங்களது
சிறப்புத் தனிவரங்களால் விசுவாசத்தைப் புதிய வழியில் வாழ்கின்றன என்று கூறியுள்ளார். இந்தப்
பக்த இயக்கங்களும் குழுக்களும் ஒவ்வொரு நாளும் விசுவாசத்தின் அழகை வாழ்ந்து கடவுள்மீது
ஓர் இரசனையைக் கண்டுணர நமக்கு உதவுகின்றன என்றும் கர்தினால் ரில்கோ கூறியுள்ளார். இரண்டாம்
வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டு நிறைவான வருகிற அக்டோபர் 11ம் தேதி
தொடங்கும் விசுவாச ஆண்டு, 2013ம் ஆண்டு கிறிஸ்து அரசர் பெருவிழாவான நவம்பர் 24ம் தேதியன்று
நிறைவடையும்.