2012-09-18 15:07:07

செப்டம்பர் 19, கவிதைக் கனவுகள் - சதுரங்கம்!
தங்கமீன் என்ற வலைதளத்தில் பாலாவின் கவிதைகள் என்ற தொகுப்பில் நா.பாலா எழுதிய கவிதை


கட்டங்கள் சிதைந்திருந்த
பலகையில்
தொடங்கிற்று
ஓர் சதுரங்க ஆட்டம்!
அத்தனைக் காய்களும்
ஒரே வண்ணத்தில் இருந்தன!

எதிர் திசைக்கு
நகர்ந்துவிட்டிருந்தக் காய்கள்
எதை வெட்டுவது
எதை விடுவது
என்ற குழப்பத்திலிருந்தன!
அரச குடும்பத்துச் சூழ்ச்சி போல்
எதிர்பாராத் திசைகளிலிருந்து
மாறி மாறி
வெட்டுதல் நிகழ்ந்து கொண்டிருந்தது!

சிதைந்த கட்டங்களில்
வழி தவறிப் போயிருந்த
குதிரையொன்று
கிடைத்தவிடத்தில் நின்றுகொண்டது!

இரு இராணிகளும்
தத்தம் அரசனைக்
கண்டறியவியலாமல்
தள்ளி நின்று யோசித்துக் கொண்டேயிருந்தன!

ஆட்டம் முடிவின்றிச் செல்வதை
உணர்ந்த சதுரங்கம்
எவரும் பார்த்திராத நேரங்களில்
தேடித் தேடி
காய்களுக்கு வர்ணம் பூசிக்கொண்டிருந்தது!








All the contents on this site are copyrighted ©.