திருத்தந்தையின் திருப்பயண விளைவுகள் குறித்து திருப்பீடப்பேச்சாளர்
செப். 17, 2012. திருத்தந்தையின் அண்மை லெபனன் திருப்பயணத்தின்போது அந்நாட்டு அரசுத்தலைவர்
திருத்தந்தையின் ஏறத்தாழ அனைத்துப் பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டது, முக்கியமான
ஓர் அடையாளம் மட்டுமல்ல, இத்திருப்பயணத்திற்கு லெபனன் நாடு கொடுத்த முக்கியத்துவத்தின்
வெளிப்பாடு என்றார் திருப்பீடப்பேச்சாளர் அருட்தந்தை ஃபெதரிக்கோ லொம்பார்தி. திருத்தந்தையின்
திருப்பயணத் தாக்கம் குறித்துப் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்த இயேசு
சபை குரு. லொம்பார்தி, இன்றைய இளைஞர்கள் எதிர்நோக்கும் ஆபத்துக்கள் மற்றும் பிரச்சனைகள்
குறித்து அவ்விளைஞர்களிடம் திருத்தந்தை விளக்கியதைச் சுட்டிக்காட்டினார். பலமுறை அனைத்துலக
சமுதாயத்திடம் மத்தியக் கிழக்குப் பகுதியின் அமைதிக்காக உழைக்குமாறு விண்ணப்பித்துள்ள
திருத்தந்தை, அமைதியின் பாதையைக் கண்டுகொள்ள அரபு நாடுகள் முழுவதும் ஒன்றிணைந்து உழைக்க
வேண்டியதன் அவசியத்தை இத்திருப்பயணத்தின்போது வலியுறுத்தினார் என்றார் திருப்பீடப்பேச்சாளர்.
இத்திருப்பயணத்தின் நல்விளைவுகள் குறித்து திருத்தந்தை மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும்,
திருப்பயணத்தின்போது தனக்கு கிடைத்த வரவேற்பு குறித்து ஒவ்வொரு நாளும் வியந்து பாராட்டியதாகவும்
கூறினார் குரு லொம்பார்தி.