ஒசோன் வாயுமண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை அடுத்த 50 ஆண்டுகளில் சரிசெய்துவிட
முடியும் - ஐ.நா.பொதுச் செயலர்
செப்.17,2012. ஒசோன் வாயுமண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை அடுத்த 50 ஆண்டுகளில்
சரிசெய்துவிட முடியும் என ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார். ஒசோன் வாயுமண்டலத்தைப்
பாதுகாப்பது குறித்த அனைத்துலக நாள் இஞ்ஞாயிறன்று(செப்.16) கடைப்பிடிக்கப்பட்டதையடுத்து
செய்தி வெளியிட்ட பான் கி மூன், நாம் விரும்பும் எதிர்காலத்தைப் பெறுவதற்கு இப்போதுள்ள
அதே ஆர்வத்தோடு தொடர்ந்து செயல்படுமாறு அனைத்து அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளார். ஒசோன்
வாயுமண்டலத்தைப் பாதுகாப்பது குறித்த Montreal ஒப்பந்தம் 1987ம் ஆண்டு, செப்டம்பர் 16ம்
தேதி கையெழுத்திடப்பட்டது. அந்த நாள் ஒசோன் வாயுமண்டலத்தைப் பாதுகாப்பது குறித்த அனைத்துலக
நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு இந்த நாளின் 25வது ஆண்டு நிறைவாகும். ஒசோன்
வாயுமண்டலத்தில் விழுந்துள்ள ஓட்டைகளால் சூரிய ஒளி நேரிடையாகப் பூமியைத் தாக்குவதால்
ஏற்பட்டுள்ள அல்ட்ராவைலட் கதிர்வீச்சுக்கள் தோல் புற்றுநோய்கள், கண்திரைப்படலம் போன்ற
நோய்களுக்குக் காரணமாகின்றன, எனினும், உலகில் எடுக்கப்பட்டுள்ள வாயுக்கள் வெளியேற்றக்
கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் இந்நோய்களிலிருந்து ஏற்கனவே இலட்சக்கணக்கானோர் காப்பாற்றப்ப்ட்டுள்ளனர்
என்றும் ஐ.நா.பொதுச் செயலரின் செய்தி கூறுகின்றது.