செப்டம்பர் 16, பொதுக்காலம் - 24ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை
ஒரு கற்பனைச் சம்பவத்துடன்
இந்த ஞாயிறு சிந்தனையை ஆரம்பிப்போம். தலைவர் ஒருவர் நண்பர்களோடு நடந்து கொண்டிருக்கிறார்.
திடீரென, நண்பர்கள் பக்கம் திரும்பி, "மக்கள் என்னைப்பத்தி என்ன சொல்றாங்க?" என்று கேட்கிறார்.
நண்பர்கள் ஒரு சில நிமிடங்கள் திகைத்துப்போய் நிற்கிறார்கள். கொஞ்சம் மென்று முழுங்கி,
ம்ம்... வந்து... என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் பலவாறாக
இருக்கும். அந்தத் தலைவர் மக்களுக்கு நல்லது செய்யும் உன்னதமானத் தலைவராக இருந்தால்,
துவக்கத்தில் ஏற்படும் தயக்கத்திற்குப் பிறகு, பல உண்மை பதில்கள் வெளிவரும். ஆனால் அந்தத்
தலைவர் ஒரு தாதாவாகவோ அல்லது ஒரு அரசியல்வாதியாகவோ இருந்தால்... இந்தக் கேள்விக்கு உண்மையான
பதில்சொல்ல முடியாமல், அவருடைய நண்பர்கள் தடுமாறிப்போவார்கள்.
நம் கற்பனையைத்
தொடர்வோம். இன்னும் கொஞ்சம் தூரம் போனதும், தலைவன் மீண்டும் திரும்பி, "ஜனங்க சொல்றதெல்லாம்
இருக்கட்டும். நீங்க என்னைப்பத்தி என்ன சொல்றீங்க?" என்று கேட்டால், அந்த நண்பர்களெல்லாம்
அதிர்ச்சியில் உறைந்து போவார்கள். உடன் பதில்கள் வராது... இது ஆழமான கேள்வி. நாக்கு நுனியிலிருந்து
வார்த்தைகளைக் கொட்டி பதில் சொல்லிவிடலாம். ஆனால், அந்த வார்த்தைகளில் போலித்தனம் தெரியும்.
இந்தக் கேள்விக்கு மனதின் ஆழத்திலிருந்து பதில் வரணும். "உடனே பதில் சொல்லணும்னு அவசியம்
இல்ல... யோசிச்சு சொல்லுங்க" என்று தலைவன் சொன்னதும், அந்த இறுக்கமானச் சூழ்நிலை கொஞ்சம்
தளரும். அந்த நேரத்தில் யாராவது ஒருவர் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பிறக்கும் உண்மையான
பதிலைச் சொல்ல ஆரம்பித்தால், மற்றவர்களும் தங்கள் மனதில் பட்டதைச்சொல்ல, அங்கு ஒரு நல்ல
கருத்துப் பரிமாற்றம் நடைபெறும். வெறும் சிந்தனை அளவில் எழும் வார்த்தைகளாக இல்லாமல்,
உள்ளத்தைத் திறந்து வரும் உண்மைகளாக இருக்கும். இதுபோன்ற ஒரு சம்பவத்தைத்தான் இன்று நற்செய்தியில்
வாசிக்கிறோம். இயேசு இந்த நற்செய்தியில் கேட்கும் இரு முக்கியமான கேள்விகள்: மக்கள் என்னைப்பற்றி
என்ன சொல்கிறார்கள்? நீங்கள் என்னைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பல ஆண்டுகளுக்கு
முன்னால் நான் கேட்ட கதை. நீங்களும் இதைக் கேட்டிருக்கலாம். குடி பழக்கத்தில் இருந்து
முற்றிலும் திருந்திய ஒருவரைப் பங்குத்தந்தை சந்திக்கிறார். அவர் திருந்தியதற்குக் காரணம்
என்ன என்று கேட்கும் குருவிடம் தான் இயேசுவைச் சந்தித்ததாகச் சொல்கிறார் மனம் மாறியவர்.
பங்கு குருவுக்கும், அவருக்கும் இடையே எழும் உரையாடல்: சரி, இயேசுவைச் சந்தித்ததாகச்
சொல்கிறாயே, அவர் எங்கே பிறந்தார்? ம்... எருசலேம்ல பிறந்திருக்கலாம். இயேசு எத்தனை
ஆண்டுகள் வாழ்ந்தார்? ம்... ஒருவேளை, 50 60 ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம். பங்குத்
தந்தைக்குக் கோபம். இந்தச் சாதாரண கேள்விகளுக்குப் பதில் தெரியாதவர் எப்படி இயேசுவைச்
சந்தித்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார். மனம் மாறிய அவர் சொல்லுவார்.
"சாமி, நீங்கள் கேட்கும் இந்த கேள்விகளுக்கு பதில் தெரியாது. அனால் ஒன்று தெரியும். என்
வாழ்க்கை இதுவரை பயங்கரமாக இருந்தது. அனால் இப்போது முற்றிலும் மாறிவிட்டது. இதற்குக்
காரணம் இயேசு. அவ்வளவுதான் எனக்குத் தெரியும்."
பங்குத்தந்தை கேட்ட கேள்விகளெல்லாம்
அறிவுப்பூர்வமானவை. விவிலியம் இயேசுவைப்பற்றி என்ன சொல்கிறது? மறை கல்வி, இறையியல், புத்தகங்கள்
இவை இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறது? மக்கள் இயேசுவை யாரென்று சொல்கிறார்கள்? என்ற பாணியில்
கேட்கப்படும் கேள்விகள்... இயேசுவைப்பற்றி அறிவுப்பூர்வமாகத் தெரிந்துகொள்ளும் உண்மைகள்,
கருத்துகள் ஆகியவை வாழ்க்கைக்குத் தேவைதான். ஆனால், இவைகளைவிட, மிக முக்கியமான கேள்வி:
“நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?" என்று இயேசு எழுப்பும் கேள்வி. ஒவ்வொருவரும்
தனிப்பட்ட முறையில் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
முதல் வகையில் நாம் பெறுகின்ற
ஞானம் அறிவை வளர்க்கும். நமது விவாதங்களுக்கு உதவும். இரண்டாவது வகையில் நாம் பெறுகின்ற
ஞானம் நமது வாழ்க்கையை மாற்றும். இந்த சவாலைத்தான் இயேசு இன்று நமது நற்செய்தி வழியாக
நமக்குத் தருகிறார். பேதுரு அன்று சொன்னது ஆழமான பதில். ஆனால் அந்தப் பதிலோடு அவர்கள்
பரிமாற்றம் அன்று நின்றுவிடவில்லை. இயேசு தொடர்ந்து சொன்னது இதுதான்: "என்னைப்பற்றி
ஓரளவு உணர ஆரம்பித்திருக்கிறீர்கள். நல்லது. இன்னும் என்னைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றால்,
என்னைப்போல நீங்களும் துன்பப்பட வேண்டும். என்னையும் என் வார்த்தைகளையும் சரியாகப் புரிந்துகொண்டால்,
என் செயல்பாடுகளிலும், சிலுவையிலும் நீங்கள் பங்கு பெறவேண்டும்."
கடவுளைப் பற்றி
வெறும் புத்தக அறிவு போதாது. அப்படி நாம் தெரிந்துகொள்ளும் கடவுளைக் கோவிலில் வைத்துப்
பூட்டிவிடுவோம். விவிலியத்தில் வைத்து மூடிவிடுவோம். அனால், இறைவனை அனுபவத்தில் சந்தித்தால்,
வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும்.
அன்பர்களே, இந்த ஞாயிறு சிந்தனையின் இறுதியில்
நான் சொல்ல விரும்புவது இதுதான். நம் நண்பர்கள் மத்தியிலோ, நமது குடும்பங்களிலோ வெறும்
உதட்டளவு வார்த்தைப் பரிமாற்றங்கள் இல்லாமல், உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் பரிமாற்றங்கள்
அதிகமாக வேண்டும். இவ்வகைப் பரிமாற்றங்களிலிருந்து நம்மைப்பற்றி இன்னும் அதிகத் தெளிவு
கிடைக்கும். அதேபோல் நமது பரிமாற்றங்களில் நாம் நம்புகின்ற கடவுளைப்பற்றியும் பேசுவோம்.
நம்மைப்பற்றியும், கடவுளைப்பற்றியும், இயேசுவைப்பற்றியும் தெளிவும், ஆழமும் கிடைக்கும்போது,
அந்த எண்ணங்கள், உணர்வுகள் நமது வாழ்க்கையைக் கட்டாயம் மாற்றும். இந்தப் புதுமை நமக்கெல்லாம்
நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.