திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் இருப்பை
வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது
செப்13,2012. திருத்தந்தையின் லெபனன் நாட்டுக்கான திருப்பயணம் மத்திய கிழக்குப் பகுதியில்
கிறிஸ்தவர்களின் இருப்பை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று, புனித பூமியில்
கீழைரீதி இறையியல் மற்றும் இசுலாமியம் குறித்தப் பாடங்களை நடத்தும் சலேசிய அருள்தந்தை
Pier Giorgio Gianazza, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார். இன்னும்,
இத்திருப்பயணம் குறித்துப் பேசிய, லெபனனில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சிரியன்ரீதி கத்தோலிக்கத்
திருஅவையின் முதுபெரும் தலைவர் Ignace Youssef Joseph III Younan, மத்திய கிழக்குப் பகுதியில்
பெரும்பான்மையாக வாழும் முஸ்லீம்கள் போன்று கிறிஸ்தவர்கள் முழுகுடியுரிமையை அனுபவிக்கவில்லை
என்று தெரிவித்தார். சிரியாவில் ஆரம்பிக்கப்பட்ட சிரியன்ரீதி கத்தோலிக்கத் திருஅவையின்
உறுப்பினர்கள், சிரியாவில் அமைதியில் வாழ்ந்தார்கள் என்றும் உரைத்த முதுபெரும் தலைவர்
Ignace, தற்போது சிரியாவைப் பாதித்துள்ள அரபு வசந்தம் என்ற மக்கள் எழுச்சி, சிரியாவிலுள்ள
கிறிஸ்தவர்களுக்கு நெருக்கடிநிலைகளை உருவாக்கியிருப்பதாகக் கூறினார்.