செப்.08,2012. நாடுகளில் அமைதி மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு எழுத்தறிவு மிகவும்
முக்கியம் என்பதால், சிறாரும், இளையோரும், வயது வந்தோரும் எழுத வாசிக்கக் கற்றுக் கொள்வதன்
மூலம் தங்கள் வாழ்வை மாற்றிக் கொள்வதற்கு அதிக முயற்சிகள் எடுக்கப்படுமாறு ஐ.நா.அதிகாரிகள்
வேண்டுகோள் விடுத்துள்ளனர். எழுத்தறிவுக்கும் அமைதிக்கும் இடையே இருக்கும் அடிப்படை
உறவை வலியுறுத்தி இச்சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட உலக எழுத்தறிவு தினத்தையொட்டி அறிக்கை
வெளியிட்ட ஐ.நா.வின் கல்வி, கலாச்சாரம் மற்றும் அறிவியல் நிறுவனமான யுனெஸ்கோ இயக்குனர்
Irina Bokova, சிறார் மற்றும் வயது வந்தோர் எழுத்தறிவு பெறுவதற்கு இருக்கும் வாய்ப்புக்களைத்
தடைசெய்யும் சண்டைகளை நாம் அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார். “எழுத்தறிவு பத்தாண்டுகள்”
என்ற தலைப்பில் எல்லாரும் எழுத்தறிவு பெறுவதற்கு 2002ம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டுவரும்
முயற்சிகளின் பலனாக, உலக அளவில் மிகுந்த பலன் கிடைத்திருந்தாலும், ஏறத்தாழ 77 கோடியே
50 இலட்சம் பேர் இன்னும் எழுத்தறிவற்றவர்கள் என்றும், இவர்களில் 85 விழுக்காட்டினர் 41
நாடுகளில் வாழ்கின்றனர் என யுனெஸ்கோ அதிகாரிகள் கூறுகின்றனர். 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி
இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 74 விழுக்காடாகும்.