செப்.06,2012. அன்பர்களே, ஆசியாவின் லூர்து நகர் என அழைக்கப்படும் வேளாங்கண்ணி ஆரோக்ய
அன்னைத் திருவிழா செப்டம்பர் 8, இச்சனிக்கிழமை வெகுச் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கானத்
திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ இவ்வாண்டு விழாத் திருப்பலியை தலைமையேற்று
நிகழ்த்துகிறார். இந்தியாவின் பல இடங்களிலிருந்து தினமும் 69 தடவைகள் வேளாங்கண்ணிக்கு
இரயில்கள் வருவதால் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் என்று வேளாங்கண்ணி
ஆரோக்ய அன்னைத் திருத்தல உதவி அதிபரும் பங்குத் தந்தையுமான அருட்பணி பி.ஆரோக்யதாஸ் சொல்கிறார்.
இந்த ஆகஸ்ட் 29ம் தேதியிலிருந்து நவநாள் பக்தி முயற்சிகள் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்று
வருகின்றன. இவற்றில் ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அந்த ஆரோக்ய
அன்னையின் அருள் பெற்றுச் செல்கின்றனர். பெற்ற வரங்களுக்கு நன்றியும் சொல்கின்றனர். இந்தப்
பக்தர்களில் இருவரைத் தொலைபேசியில் அழைத்தோம். முதலில் பூம்புகார் திரு.குணசேகரன் அவர்களும்
பின்னர் கேரளாவின் திருமதி ரீட்டா அவர்களும் பேசுகின்றனர். இவ்விருவரையும் தொடர்ந்து
அருட்பணி பி.ஆரோக்யதாஸ் அவர்கள் பேசுகிறார்.