கர்தினால் கார்லோ மரிய மர்த்தினியின் அடக்கச் சடங்கில் திருத்தந்தையின் இரங்கல் செய்தி
செப். 03, 2012. இத்தாலியின் மிலான் மாநகர முன்னாள் பேராயர் கர்தினால் கார்லோ மரிய மர்த்தினியின்
மறைவால் துன்புறும் அந்த உயர் மறைமாவட்ட விசுவாசிகள், அவர் சார்ந்திருந்த இயேசு சபை அங்கத்தினர்கள்
மற்றும் அவரின் உறவினர்களுக்கு திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கற்
செய்தி, இத்திங்கள் மாலை 4 மணிக்குத் தொடங்கிய கர்தினாலின் அடக்கச்சடங்கு திருப்பலியின்போது
திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்திரியால் வாசித்தளிக்கப்பட்டது. 'என்
காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!' என்ற திருப்பாடல் வரிகள்,
கர்தினால் மரிய மர்த்தினியின் வாழ்வை எடுத்துக்காட்டுபவைகளாக உள்ளன என தன் செய்தியில்
கூறியுள்ள திருத்தந்தை, இந்தக் கர்தினால் விவிலியத்தில் மேற்படிப்பு படித்தவர் மட்டுமல்ல,
அதையே தன் வாழ்வின் ஒளியாக்கியவர் எனப் பாராட்டியுள்ளார். ஏழைகள், துன்புறுவோர் ஆகியவர்களை
மேய்ப்புப்பணி அக்கறையுடனும் ஆழமான பிறரன்புடனும் அணுகியவர் கர்தினால் மரிய மர்த்தினி
என தன் இரங்கற் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.