நேர்காணல் – இரமோன் மகசேசே விருது - திருவாளர் குழந்தை பிரான்சிஸ்
ஆக.30,2012. அன்பு நேயர்களே, இந்தியாவின் சமூகநல ஆர்வலர் திருவாளர் குழந்தை பிரான்சிஸ்,
பங்களாதேஷ் வழக்கறிஞர் Syeda Rizwana Hasan, கம்போடிய வேளாண் நிபுணர் Yang Saing Koma,
இந்தோனேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் Ambrosius Ruwindrijarto, பிலிப்பீன்ஸ் வேளாண் அறிவியலாளர்
Romulo Davide, தாய்வான் காய்கறி விற்பனையாளர் Chen Shu-Chu ஆகிய ஆறு பேர், 2012ம் ஆண்டின்
ரமோன் மகசேசே விருதைப் பெறுபவர்கள். இவர்களது பெயர்களை, கடந்த ஜூலை 26ம் தேதி மனிலாவின்
மகசேசே விருதுக்குழு வெளியிட்டது. ஆசியாவின் நொபெல் விருது என அழைக்கப்படும் இந்த இரமோன்
மகசேசே விருது ஆகஸ்ட் 31ம் தேதி இவ்வெள்ளிக்கிழமையன்று பிலிப்பீன்ஸின் மனிலாவில் வழங்கப்படுகிறது.
பிலிப்பீன்ஸின் முன்னாள் அரசுத்தலைவர் இரமோன் மகசேசேயின் பெயரால் 1958ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட
இவ்விருதை இதுவரை 49 இந்தியர்கள் உட்பட 290 பேர் பெற்றுள்ளனர். இவர்களில் M.S. சுவாமிநாதன்,
M.S. சுப்புலட்சுமி, T.N. சேஷன், P.Sainath உட்பட 6 பேர் தமிழர்கள். தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் ஏழைக் கிராமப்புறப் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்தில் IVDP
என்ற ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சித் திட்டம் என்ற அரசு-சாரா அமைப்பை 1979ம் ஆண்டு
முதல் நடத்தி வருபவர் திருவாளர் குழந்தை பிரான்சிஸ். கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் ஆகிய
மூன்று மாவட்டங்களில் எட்டாயிரத்துக்கு மேற்பட்ட சுயஉதவிக் குழுக்கள் இந்த IVDP திட்டத்தின்
ஆதரவுடன் தற்போது செயல்பட்டு வருகின்றன. இவ்வாண்டுக்கான இரமோன் மகசேசே விருதை மனிலாவில்
இவ்வெள்ளியன்று பெறும் திருவாளர் குழந்தை பிரான்சிஸ் அவர்களைத் தொலைபேசியில் அழைத்தோம்.