ஆக.29,2012. கோடைவிடுமுறை காலத்தை திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்ஃபோவில்
செலவிட்டு வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அவ்வில்ல வளாகத்திலேயே இவ்வார புதன் பொது
மறைபோதகத்தையொட்டி மக்களைச் சந்தித்தார். இப்புதனன்று திருஅவை சிறப்பித்த, 'புனித திருமுழுக்கு
யோவானின் மறைசாட்சிய மரணம்’ குறித்து இம்மறைபோதகத்தில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்
அவர். புனித திருமுழுக்கு
யோவானின் பிறப்பை ஜூன் மாதம் 24ம் தேதியும், அவரின் மறைசாட்சிய மரணத்தை ஆகஸ்ட் மாதத்தின்
கடைசி புதனான இன்றும் சிறப்பிக்கின்றோம். திருஅவையின் உரோமன் நாட்காட்டியில், ஒருவரின்
பிறப்பும் இறப்பும் சிறப்பிக்கப்படுவது இப்புனிதருக்கு மட்டுமே. புனித லூக்கா எழுதிய
நற்செய்தியில், திருமுழுக்கு யோவானின் பிறப்பு, அவர் மேற்கொண்ட பாலைவன வாழ்வு, அவரது
போதனை ஆகியவைகளையும், மாற்குவின் நற்செய்தியில், திருமுழுக்கு யோவானின் மரணம் குறித்தும்
வாசிக்கின்றோம். திபேரியு சீசர் ஆட்சி செய்து வந்த காலத்தில் மக்களை நோக்கி, மனம் திரும்ப
அழைப்பு விடுத்து போதித்த திருமுழுக்கு யோவான், அதோடு நிறுத்தி விடவில்லை. 'இதோ! கடவுளின்
ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்' என இயேசுவைக் குறித்து
சாட்சியம் பகர்கிறார். இறுதியாக, இறைக் கட்டளைகளுக்கு விசுவாசமாக இருப்பதற்கு, தன் இரத்தம்
சிந்துதல் மூலம் சாட்சியம் வழங்கினார் புனித திருமுழுக்கு யோவான். உண்மை மீதான அன்பின்
சாட்சியமாக அது இருந்தது.
புனித திருமுழுக்கு யோவான், செபத்தின் மனிதர் மட்டுமல்ல,
இறைவனுடன் நாம் கொள்ளும் உறவுக்கு வழிகாட்டியாகவும் விளங்குகிறார். இயேசு செபிக்கக் கற்றுக்கொடுக்கும்
முன்னர், அவருடைய சீடர்களுள் ஒருவர் ' ஆண்டவரே, யோவான் தன் சீடருக்கு இறைவனிடம் வேண்டக்
கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக்கொடும்' என இயேசுவை நோக்கி வேண்டியதை புனித
லூக்கா எடுத்துரைக்கிறார். செபம் என்பது நேரத்தை வீணடிப்பது அல்ல, அதற்கு நேர் எதிரானது.
ஏனெனில், செபத்தின் வழியாகவே நாம், அன்பான, அமைதியான ஒரு வாழ்வைப் பெறுவதற்கும், துன்பங்களை
மேற்கொள்வதற்கும், துணிவுடன் சாட்சியம் பகர்வதற்கும் தேவையான பலத்தை இறைவனிடமிருந்து
பெறுகிறோம். நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் இயேசு நுழைந்து, அதன்வழி அவரைக் குறித்து
இவ்வுலகிற்கு நாம் பறைசாற்ற உதவும் பொருட்டு புனித திருமுழுக்கு யோவானின் எடுத்துக்காட்டைப்
பின்பற்றுவோம்.
இவ்வாறு, புனித திருமுழுக்கு யோவான் குறித்த தன் புதன் பொது மறைபோதகத்தை
வழங்கியத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.