அடிமை வியாபாரம் குறித்துச் சிந்திக்குமாறு யுனெஸ்கோ இயக்குனர் அழைப்பு
ஆக.24,2012. அடிமை வியாபாரம் உலகத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்துச் சிந்திக்குமாறு
இவ்வியாழனன்று கேட்டுள்ளார் யுனெஸ்கோ என்ற ஐ.நா.வின் கல்வி, கலாச்சாரம் மற்றும் அறிவியல்
நிறுவன இயக்குனர் Irina Bokova. அனைத்துலக அடிமை வியாபார ஒழிப்பு நாள், ஆகஸ்ட் 23ம்
தேதியன்று நினைவுகூரப்பட்டதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட யுனெஸ்கோ இயக்குனர் Bokova,
இனவெறி மற்றும் கட்டாயவேலைக்கு எதிராய்த் தன் குடிமக்களைப் பாதுகாக்குமாறு நாடுகளுக்கு
வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்ரிக்கப் பூர்வீக இன மக்களுக்கு ஆதரவாக அடுத்த ஆண்டில்
தொடங்கவிருக்கும் ஆப்ரிக்கப் பூர்வீக இன மக்களுக்கானப் பத்தாண்டுகள் என்ற நடவடிக்கைக்குத்
தயாரிப்பாக இவ்வாண்டின் இந்த அனைத்துலக நாளின் நிகழ்வுகள் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1791ம்
ஆண்டு ஆகஸ்ட் 22 மற்றும் 23ம் தேதிகளில் Saint Domingueவிலிருந்த (தற்போதைய ஹெய்ட்டி)
அடிமைகள் கிளர்ச்சி செய்ததன் நினைவாக இந்த அனைத்துலக அடிமை வியாபார ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.