2012-08-23 15:59:28

இறையடி சேர்ந்த கர்தினாலின் மறைவுக்குத் திருத்தந்தையின் இரங்கல் செய்தி


ஆக.23,2012. தாய்வான் நாட்டின் Kaohsiung மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயராகப் பணிபுரிந்த கர்தினால் Paul Shan Kuo-Hsi, இப்புதன் காலை இறையடி சேர்ந்தார். அவருக்கு வயது 89.
கர்தினாலின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் Kaohsiung ஆயர் Peter Liu Cheng-chungக்கு இரங்கல் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.
கர்தினாலின் மறைவு Kaohsiung மறைமாவட்டத்திற்கும் சீனத் திருஅவைக்கும் ஈடுசெய்ய இயலாத ஓர் இழப்பு என்று திருத்தந்தை தன் தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.
1923ம் ஆண்டு சீனாவின் Shanghaiயில் பிறந்த Paul Shan, தனது 23வது வயதில் பெய்ஜிங்கில் இயேசு சபையில் சேர்ந்து குருவானார்.
1963ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை இயேசுசபை நவதுறவிகளின் வழிகாட்டியாகவும், 1976 முதல் மூன்றாண்டுகள் Kuangchi கத்தோலிக்கத் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராகவும் பணிபுரிந்த Paul Shan, 1980ம் ஆண்டு Hwalien மறைமாவட்டத்தின் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
ஆசிய ஆயர் பேரவையிலும், திருப்பீடத்திலும் பொறுப்பான பணிகளை ஆற்றிய ஆயர் Paul Shan Kuo-Hsiஐ 1998ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் கர்தினாலாக உயர்த்தினார்.
கர்தினால் Paul Shan Kuo-Hsiன் விருப்பப்படி, அவரது அடக்கச் சடங்குகள் எளிமையான முறையில் செப்டம்பர் முதல் தேதி Kaohsiungல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கர்தினால் Paul Shan Kuo-Hsiன் மறைவை அடுத்து, திருஅவையில் 207 கர்தினால்கள் உள்ளனர். இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை 118 பேருக்கு உள்ளது. கர்தினால்கள் குழுவில் தற்போது 7 பேர் இயேசு சபையைச் சேர்ந்தவர்கள்.







All the contents on this site are copyrighted ©.