சென்னை:முதியோரும் மாற்றுத்திறனாளிகளும் விடுதலை செய்யப்படுமாறு சிறைப்பணி அமைப்பு வலியுறுத்தல்
ஆக.21,2012. தமிழகச் சிறைகளில் இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தண்டனைகளை அனுபவித்துவரும்
முதியோரும் மாற்றுத்திறனாளிகளும் விடுதலை செய்யப்படுமாறு தமிழகக் கத்தோலிக்க சிறைப்பணி
அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியன்றும்,
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதியன்றும்
தமிழகத்தில் கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கத்தில் உள்ளது. இதையொட்டி தமிழக
அரசு கைதிகளின் பட்டியலை தயாரித்து வரும் இவ்வேளையில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிக்
கைதிகள் மீது அரசு சலுகை காட்ட வேண்டுமென்று தாங்கள் வலியுறுத்துவதாக, இந்திய சிறைப்பணி
அமைப்பின் செயலர் அமலதாஸ் சேசுராஜா கூறினார். தமிழக ஆளுனர் திருவாளர் ஜி.ரோசைய்யாவை,
சென்னை-மயிலை பேராயர் மலையப்பன் சின்னப்பா அவர்கள் தலைமையில் சந்தித்து இந்தத் தங்களது
விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது இந்திய சிறைப்பணி அமைப்பு. கத்தோலிக்கத் திருஅவையின்
முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ள இந்திய சிறைப்பணி அமைப்பின் தமிழகக்கிளையின் 300க்கும்
மேற்பட்ட தன்னார்வப் பணியாளர்கள் தமிழகத்தின் முக்கிய சிறைகளைச் சந்தித்து வருகின்றனர்.
அக்டோபர் 2, இந்திய தேசிய சிறைக் கைதிகள் நல்வாழ்வு தினமாகும்.